புதிய வரலாறு... சுப்ரீம் கோர்ட்டில் இன்று அனைத்து மகளிர் நீதிபதி பெஞ்ச்!
டெல்லி: உச்சநீதிமன்ற வரலாற்றிலேயே முதல் முறையாக முற்றிலும் பெண் நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் ஒன்று இன்று விசாரணையில் ஈடுபடவுள்ளது.
இதுவரை உச்சநீதிமன்ற வரலாற்றில் முழுக்க முழுக்க பெண் நீதிபதிகளைக் கொண்ட பெஞ்ச் விசாரணையில் அமர்ந்ததில்லை.இன்றுதான் முதல் முறையாக அது நடக்கவுள்ளது.
நீதிபதிகள் கியான் சுதா மிஸ்ரா தலைமையிலான இந்த பெஞ்ச்சில் இன்னொரு நீதிபதியாக ரஞ்சனா பிரகாஷ் தேசாய் இடம் பெறவுள்ளார்.
உச்சநீதிமன்றத்தின் 4வது கோர்ட்டில் இவர்கள் இன்று விசாரணை மேற்கொள்வார்கள். இருப்பினும் இது தற்காலிகமானதுதான். அதாவது இன்று மட்டுமே இந்த பெஞ்ச் செயல்படும். இந்த பெஞ்ச்சில் இடம் பெற வேண்டிய நீதிபதி அப்தாப் ஆலம் இன்று வர இயலாததால், மகளிர் பெஞ்ச்சாக இது மாறி விட்டது.
இந்த இரண்டு பெண் நீதிபதிகள் மட்டுமே தற்போதைய உச்சநீதிமன்ற நீதிபதிகளில் இடம் பெற்றுள்ள பெண்கள் ஆவர் என்பது குறிப்பிடத்தக்கது.