சென்னையில் ரயில்வே என்ஜினீயர் மனைவி படுகொலை… பணம் நகை கொள்ளை
சென்னை: சென்னை திரு.வி.க. நகரில் ரயில்வே என்ஜினீயர் மனைவியை கொன்று நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பூர் திரு.வி.க. நகர் சாய் தருண் அடுக்குமாடி குடியிருப்பில் கிருஷ்ணகுமார்-சுமதி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு முரளிதரன் (22) என்ற மகனும், லேகா என்ற மகளும் உள்ளனர். ரயில்வே என்ஜினீயரான கிருஷ்ணகுமார் திருச்சியில் வேலை பார்த்து வருகிறார். வாரம் ஒரு முறை வீட்டுககு வந்து செல்வார். மகள் லேகாவுக்கு திருமணமாகி கணவருடன் தனியாக வசித்து வருகிறார். மகன் முரளிதரன் பி.பி.ஏ. 3-ம் ஆண்டு படித்து வருகிறார். மாலை நேரத்தில் பகுதி நேர வேலைக்கு சென்று விட்டு அதிகாலையில் வீட்டுக்கு வருவார்.
வழக்கம் போல இந்த நிலையில் மகன் முரளிதரன் நேற்று மாலை 6.30 மணிக்கு வேலைக்கு புறப்பட்டு சென்றார். இரவில் சுமதி மட்டும் தனியாக தூங்கினார். இன்று அதிகாலை 4.30 மணியளவில் முரளிதரன் வீட்டுக்கு வந்த போது படுக்கையறையில் சுமதி படுகொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். அவரது வயிற்றில் கத்திக்குத்து காயங்கள் இருந்தன.
தாய் பிணமாக கிடப்பதை பார்த்து முரளிதரன் அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி திரு.வி.க. நகர் போலீசில் புகார் செய்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சடலத்தைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். அப்போது சுமதி போட்டிருந்த 4.5 பவுன் நகை, பீரோவில் இருந்த ரூ.20 ஆயிரம் பணம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. தெரியவந்தது
மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு மோப்பம் பிடித்து சிறிது தூரம் ஓடி நின்றது. கைரேகை நிபுணர்கள் கொலையாளிகளின் ரேகைகளை பதிவு செய்தனர். கொலை தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
சுமதியின் மகள் லேகா, மருமகன் ரவிச்சந்திரன் ஆகியோர் நேற்று மாலை வீட்டுக்கு வந்திருந்தனர். லேகா தனது தாயிடம் ரூ.20 ஆயிரம் பணம் கொடுத்துள்ளார். இரவு 8.30 மணி வரை அவர்கள் பேசிக் கொண்டிருந்தனர். அதன் பிறகே மகளும் மருமகனும் புறப்பட்டுச் சென்றுள்ளனர். மகள் கொடுத்த ரூ.20 ஆயிரம் பணத்தை சுமதி பீரோவில் வைத்துள்ளார். அந்த பணத்தைதான் கொலையாளிகள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
எனவே நகை-பணத்துக்கு ஆசைப்பட்டு நன்கு தெரிந்தவர்களே இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர். இதுதொடர்பாக உறவினர்களிடமும், அக்கம் பக்கத்தினரிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.