பேசின் பிரிட்ஜ் ரெயில்வே பணிமனையில் தீ: 3 பெட்டிகள் எரிந்தன
சென்னை: சென்னை பேசின் பிரிட்ஜ் ரயில்வே பணிமனையில் நின்று கொண்டிருந்த ரயிலில் தீப்பிடித்ததில் மூன்று பெட்டிகள் எரிந்து சாம்பலானது.
சென்னை சென்ட்ரலில் இருந்து வாரணாசி சாப்ரா வாரந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது. அந்த ரெயில் நேற்று சென்ட்ரல் நிலையத்திற்கு வந்தது. பயணிகள் இறங்கி சென்ற பிறகு பெட்டிகள் பேசின் பிரிட்ஜ் யார்டுக்கு (பணிமனை) கொண்டு செல்லப்பட்டது.
அங்கு நின்ற ரெயில் பெட்டிகளில் எஸ்-1 பெட்டி இன்று காலை 8.40 மணியளவில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. தீ பெட்டி முழுவதும் பரவி எரிந்தது. பெட்டியில் இருக்கைகள், கழிவறைகள், அனைத்தும் எரிந்து நாசமாயின.
எஸ்-1 பெட்டியில் பிடித்த தீ அருகில் இருந்த எஸ்-2 பெட்டியிலும், மற்றொரு பெட்டியிலும் பிடித்தது. இதில் அந்த இரண்டு பெட்டிகளில் கழிவறைகள் முழுமையாக சேதம் அடைந்தன. தகவல் தெரிவிக்கபட்டு தீயணைப்பு வண்டி அங்கு வந்து வீரர்கள் தீ மேலும் பரவாமல் தடுத்து அணைத்தனர். 9.20 மணிக்கு தீ முற்றிலும் அணைக்கப்பட்டது.
ரெயில் பெட்டிகள் பராமரிக்கும், பணிமனையில் நிறுத்தப்பட்டு இருந்த ரெயில் பெட்டி திடீரென எரிந்த சம்பவம் ரெயில்வே அதிகாரிகளுக்கு அதிர்ச்சியளித்தது. சம்பவ இடத்திற்கு ரெயில்வே அதிகாரிகள், நிலைய மேலாளர் கோவிந்தசாமி, ரெயில்வே பாதுகாப்பு படை அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டனர்.
நாச வேளை காரணமாக தீப்பிடித்து எரிந்ததா? ஊழியர்கள் புகைப்பிடித்து விசப்பட்ட துண்டு பீடி, சிகரெட் தீ விபத்திற்கு காரணமா? என்று விசாரணை நடத்துகிறார்கள். மின் கசிவு ஏற்பட்டு தீ பிடித்துள்ளதாக ரெயில்வே தரப்பில் கூறப்படுகிறது. நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த பெட்டியில் எலெக்ட்ரிக்கல் பாயிண்ட்கள் அனைத்தும் ‘ஆப்' செய்யப்பட்டு இருக்கும்.
அப்படி இருந்தால் மின் சாதனங்களை ‘ஆப்' செய்ய வில்லையா? ஊழியர்களின் கவனக்குறைவால் தீ விபத்து ஏற்பட்டதா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.