ஏழைகளுக்காக ரூ.25க்கு குவார்ட்டர் மது திட்டம்: உத்தர பிரதேச அரசு அறிமுகம்
உத்தர பிரதேச அரசு ஏழைகளின் நலன் கருதியும், மது கடத்தலுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் ரூ.25க்கு குவார்ட்டர் மது விற்பனை செய்யும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த மது எல்லையோரப் பகுதிகளில் உள்ள சில கடைகளில் மட்டுமே கிடைக்கும் என்று கலால் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது குறித்து மாவட்ட கலால் துறை அதிகாரி குல்தீப் யாதவ் கூறுகையில்,
தற்போது உத்தர பிரதேசத்தில் குவார்ட்டர் நாட்டு சரக்கு ரூ. 45க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதில் 36 சதவீதம் மது உள்ளது. குவார்ட்டர் பாட்டிலை ரூ.30க்கு வாங்க ஏழை மக்கள் ஹரியானா வரை செல்கின்றனர். அதில் 28 சதவீதம் மது உள்ளது. வினியோகஸ்தர்கள் மதுவை கடத்தி வந்து விற்பதுடன் கூடுதல் பணத்துக்கு ஆசைப்பட்டு கலப்படம் செய்கின்றனர். இந்த மதுவை வாங்கி குடிப்பவர்கள் உயிர் இழக்கின்றனர்.
ஏழை மக்கள் மது மலிவாக கிடைக்கிறதா என்பதை மட்டுமே பார்க்கின்றனர், கலப்படத்தை கண்டுகொள்வதில்லை. ஏப்ரல் 1ம் தேதி முதல் மதுவின் விலை 15 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. நாட்டு சரக்கின் விலை குவார்ட்டருக்கு ரூ. 5 உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது குவார்ட்டர் நாட்டு சரக்கின் விலை ரூ. 50. இந்நிலையில் தான் ரூ.25க்கு குவார்ட்டர் திட்டம் மது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனால் ஏழை மக்கள் ஹரியானா சென்று மது வாங்கத் தேவையில்லை என்றார்.