வீராணம் காவல் நிலையத்தை பூட்டிய வழக்கறிஞர் மீது பாய்ந்தது குண்டர் சட்டம்
சேலம்: வீராணம் காவல் நிலையத்தை பூட்டுப் போட்ட வழக்கில் கைதான வழக்கறிஞர் அரிபாபு மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.
குடியுரிமை பாதுகாப்பு நடுவம் என்ற அமைப்பைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் அரிபாபு. கடந்த 5ம் தேதி சேலம் மாவட்டம் வீராணம் காவல் நிலையத்தில் கட்டப் பஞ்சாயத்து நடப்பதாகக் கூறி பகத்சிங் இளைஞர் பாசறை அமைப்பின் சார்பில் முற்றுகை போராட்டம் நடந்தது. அப்போது அரிபாபு தலைமையிலான போராட்டக்காரர்கள் காவல் நிலையத்தை பூட்டினர். இதையடுத்து காவல் நிலையத்திற்கு பூட்டுபோட்ட அரிபாபு உள்பட 20 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் கோவை சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில் அரிபாபு பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் நடந்து கொள்கிறார் என்றும், அவரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க வேண்டும் என்றும் சேலம் மாவட்ட எஸ்.பி. அஸ்வின் எம்.கோட்னீஸ் கலெக்டர் மகரபூஷணத்துக்கு பரிந்துரை செய்தார்.
அவரது பரிந்துரையின்பேரில் அரிபாபுவை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்குமாறு கலெக்டர் நேற்று உத்தரவிட்டார். இந்த உத்தரவு நகல் கோவை சிறையில் உள்ள அரிபாபுவிடம் வழங்கப்பட்டது. இதற்கிடையே வீராணம் காவல் நிலையத்தை பூட்டியது தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களுக்கு நேற்று சேலம் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. குண்டர் சடத்தில் சிறையில் அடைக்கப்படுவதால் அரிபாபுவை தவிர பிறர் இன்று விடுவிக்கப்படுகின்றனர்.
ஈழத் தமிழர் ஆதரவு போராட்டம், பழமையான மாவட்ட கலெக்டர் அலுவலக கட்டிடம் இடிப்பை எதிர்த்து போராட்டம் உள்ளிட்ட பல போராட்டங்களில் அரிபாபு கலந்து கொண்டுள்ளார். அவர் மீது போலீசார் 11 வழக்குகள் பதிவு செய்துள்ளனர். இதையடுத்து தான் அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.