பெங்களூர் குண்டுவெடிப்பு .. ஜனாதிபதி, பிரதமர் கண்டனம் தெரிவிக்கலையே ஏன்?
பெங்களூர்: பெங்களூரில் பாஜக அலுவலகம் அருகே இன்று காலை நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக இத்தனை மணி நேரமாகியும் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியோ, பிரதமர் மன்மோகன்சிங்கோ ஏன் மாநில ஆளுநர் கூட கண்டனம் தெரிவிக்காதது ஏன் என்று கேள்வி எழுந்துள்ளது.
அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் குண்டுவெடித்ததற்கு நாட்டின் ஜனாதிபதியும் பிரதமருடன் உடனேயே இரங்கல் அறிக்கை வெளியிடுகின்றனர். ஈரானில் நிலநடுக்கம் ஏற்பட்டு பலர் உயிரிழந்த உடனேயே ஜனாதிபதியிடம் இருந்தும் பிரதமரிடம் இருந்தும் உடனேயே 'ஆழ்ந்த இரங்கல்' அறிக்கை வருகிறது.
ஆனால் உள்நாட்டில் அதுவும் நாட்டின் மிக முக்கிய நகரங்களின் ஒன்றான பெங்களூரில் இன்று காலை குண்டுவெடித்து 13 பேர் படுகாயமடைந்துள்ளனர். இந்த தீவிரவாத தாக்குதல் குறித்து ஒருவார்த்தை கூட ஜனாதிபதியோ பிரதமரோ கண்டனமும் தெரிவிக்கவில்லை.. ஆறுதலும் தெரிவிக்கவில்லை.
மத்திய அரசின் இந்த பாரபட்சமான நடவடிக்கை குறித்து கர்நாடக மக்கள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். பெங்களூர் இந்தியாவின் ஒருபகுதியா இல்லையா? என்றும் ஒருவேளை பாஜக ஆளும் மாநிலம் என்பதால் தீண்டத்தகாத மாநிலமா? என்றும் பெங்களூர்வாசிகள் கேள்வி எழுப்புகின்றனர்.
அத்துடன் தற்போது ஐபிஎல் 6வது தொடர் நடைபெற்று வருகிறது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் பெங்களூர் அணியும் முக்கிய அணிகளில் ஒன்றாக திகழ்வதுடன் பெங்களூர் நகரிலும் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் குண்டு வெடிப்பு சம்பவம் நடைபெற்றிருக்கிறது. இது பற்றியெல்லாம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் உரிமையாளர் விஜய் மல்லையா வாய் திறக்காமல் ஏன் மவுனியாக இருக்கிறார் என்பதும் பெங்களூர்வாசிகளின் கேள்வியாக இருக்கிறது.
பாஸ்டன் நகரில் ஒரு தாக்குதல் நடந்த உடன் அந்நாட்டின் அதிபர் உடனே நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சியில் உரையாற்றி ஆறுதல் தெரிவிக்கிறார். அப்படி தொலைக்காட்சியில் ஆறுதலும் கண்டனமும் தெரிவிக்காவிட்டாலும் நாட்டின் தலைவர்களுக்கு அட்லீஸ்ட் ஒரு அறிக்கையாவது விடக்கூட மனமில்லையா? என்பதும் பெங்களூர்வாசிகளின் கேள்வி.. இது தங்களை அவமதிப்பதாக இருக்கிறது என்றும் கர்நாடக மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். சொந்த நாட்டு மக்களை இப்படித்தான் ஒரு மத்திய அரசு நடத்துவதா? என்பதும் அவர்களின் குமுறலாக இருக்கிறது.
இது தொடர்பாக சமூக வலைதளங்களில் பரபரப்பான விவாதம் நடைபெற்று வருகிறது...