டெங்கு காய்ச்சலுக்கு 11 மாதக் குழந்தை பலி
வாசுதேவநல்லூர்: வாசுதேவநல்லூர் அருகே டெங்கு காய்ச்சலுக்கு 11 மாதக் குழந்தை பலியானது. காய்ச்சல் தொடர்நது பரவி வருவதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
நெல்லை மாவட்டம் வாசுதேவநல்லுரிலும், அருகே உள்ள கிராமங்களிலும் நிறைய பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். வாசுதேவநல்லூர் அருகே டிராமநாதபுரம் கிராமத்தில் சுயம்புலிங்கம் கோவில் பகுதியை சேர்ந்தவர் சங்கர்ராஜா. மெக்கானிக். அவருக்கு இரண்டு பிள்ளைகள். பாலகுமரன், மகள் தர்சிணி.
குழந்தை தர்சினிக்கு 1 வாரத்துக்கு முன்பு காயச்சல் ஏற்பட்டது. உடனே அக்கம்பக்கத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். பின்னர் ராஜபாளையத்தில் உள்ள ஒரு மருத்துமனையில் சேர்த்தனர். அங்கு ரத்த பரிசோதனை செய்தபோது குழந்தைக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பதாக தெரிய வந்தது. தீவிர சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் குழந்தை தர்சினி பரிதாபகமாக இறந்தது.
11 மாத குழந்தை டெங்கு காய்ச்சலுக்கு பலியானதால் வாசுதேவநல்லூர் மக்கள் பீதியடைந்துள்ளனர். அதையடுத்து சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் நோய் தடுப்பு நடவடிக்கை எடுக்க மனு கொடுத்து வருகின்றனர்.