இந்திய எல்லைக்குள் 10 கி.மீ ஊடுருவி சோதனைச் சாவடி அமைத்த சீன ராணுவம்!
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் இந்திய எல்லைக்குள் 10 கிலோ மீட்டர் தூரம் ஊடுருவிய சீன ராணுவம் இந்தியப் பகுதியில் சோதனைச் சாவடியையும் அமைத்திருப்பதால் எல்லையில் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இமயமலைப் பகுதியில் இந்திய - சீன எல்லையில் லடாக்கை ஒட்டியுள்ள தவுலத் பெக் ஒல்டி என்ற இடத்துக்குள் சீன ராணுவத்தை சேர்ந்த 50 வீரர்கள் ஊடுருவி ஒரு சோதனைச் சாவடியையும் அமைத்திருக்கின்றனர். சீனாவின் இந்த அத்துமீறல் தொடர்பாக அந்நாட்டு ராணுவத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று இந்திய ராணுவத் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
சீனாவின் ஊடுருவல் தொடர்பாக ஜம்மு காஷ்மீர் மாநில அரசும் ஒரு விரிவான அறிக்கையை உள்துறை அமைச்சகத்துக்கு நேற்று முன் தினம் அனுப்பி வைத்திருக்கிறது.
சீனாவின் இந்த ஊடுருவலால் எல்லைப் பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.