1993ம் ஆண்டுக்கு பிந்தைய நிலக்கரி சுரங்க ஒதுக்கீடுகளை ரத்து செய்ய நாடாளுமன்ற குழு பரிந்துரை!
டெல்லி: 1993ம் ஆண்டுக்குப் பின்னர் 2008ம் ஆண்டு வரை ஒதுக்கீடு செய்யப்பட்டு எந்தப் பணியையும் மேற்கொள்ளாத அனைத்து நிலக்கரி சுரங்க ஒதுக்கீடுகளையும் ரத்து செய்ய வேண்டும் என்று பார்லிமென்ட் நிலைக் குழு பரிந்துரைந்துள்ளது.
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி. கல்யாண் பானர்ஜி தலைமையிலான பார்லிமென்ட் நிலைக்குழு இன்று தமது பரிந்துரைகளை பார்லிமென்ட்டில் முன் வைக்க இருக்கிறது.
இந்த அறிக்கையில், 1993-2008ம் ஆண்டு வரை நிலக்கரி சுரங்கங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டதில் வெளிப்படைத் தன்மை இல்லை. இந்த காலகட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்டு இன்னும் நிலக்கரியை வெட்டி எடுக்காத அனைத்து நிறுவனங்களின் உரிமங்களும் ரத்து செய்யப்பட வேண்டும். இந்த சுரங்க ஒதுக்கீடுகளுக்கு நேரிடையாக அல்லது மறைமுகமாக பரிந்துரை செய்த அனைவர் மீதும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் பார்லிமென்ட் நிலைக்குழுவின் அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
1993ம் ஆண்டு முதல் 2004ம் ஆண்டு வரை பொது ஊடகங்களில் எந்த ஒரு விளம்பரமும் கொடுக்காமலேயே நிலக்கரி சுரங்கங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாகவும் இத்தகைய ஒதுக்கீடு மூலம் அரசு கஜானாவுக்கு எந்த வருவாயும் வந்து சேரவில்லை என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதனிடையே நிலக்கரி சுரங்க ஊழல் விசாரணையில் மத்திய அரசு தலையீடு குறித்து விவாதம் நடத்தக்கோரி ராஜ்யசபாவில் அதிமுக சார்பில் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல் புகார் குறித்து நடைபெற்று வரும் சி.பி.ஐ. விசாரணையின் அறிக்கையில் மத்திய அரசு தலையிட்டு திருத்தங்கள் செய்ததாக தகவல்கள் வெளியாகின. இது தொடர்பாக விவாதிப்பதற்காக கேள்வி நேரத்தை ரத்து செய்ய வேண்டும் என்று அ.தி.மு.க. உறுப்பினர் வி.மைத்ரேயன் ராஜ்யசபாவில் ஒத்திவைப்பு தீர்மானம் கொடுத்து இருந்தார்.