அதிமுக ஆட்சியில் 'ஆதாயக் கொலைகள்' குறைந்துள்ளன: ஜெயலலிதா

சட்டசபையில் இன்று காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறை மானியக் கோரிக்கைகள் மீது நடந்த விவாதம்...
பண்ருட்டி ராமச்சந்திரன் (தேமுதிக): தமிழகத்தில் ஆதாயக் கொலைகள் அதிகரித்துவிட்டன. இதன் மீதான அரசின் நடவடிக்கை என்ன?
முதல்வர் ஜெயலலிதா: தமிழகத்தில் கொலைக் குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக எதிர்க்கட்சித் துணைத் தலைவர் குறிப்பிட்டார். எனது முந்தைய ஆட்சி காலமான 2003ல் 1,487 என்று இருந்த கொலை சம்பவங்களின் எண்ணிக்கை 2006ல் 1,274 ஆகக் குறைந்தது. ஆனால், திமுக ஆட்சியில், 25.5 சதவீதம் அதிகரித்தது.
அதேப்போல, 2011ம் ஆண்டு அதிமுக பதவியேற்ற பிறகு கொலை சம்பவங்களின் உயர்வு சதவீதம் குறைந்துள்ளது. 2011ல் உயர்வு சதவீதம் 1.86 ஆகக் குறைந்து, மேலும், 2012ல், 3.38 சதவீதமாக அதிகரித்துள்ளது என்றாலும், திமுக ஆட்சியோடு ஒப்பிடும் போது கொலை சம்பவங்களின் அதிகரிப்பு 2 சதவீதம் குறைந்துள்ளது.
கொலைகள் திடீரென ஏற்படும் உணர்ச்சி கொந்தளிப்புகளின் காரணமாக நிகழ்பவை என்பதால், காவல் துறையினரால் அதனைத் தடுப்பது இயலாத காரியமாகும். எனவே, ஒட்டுமொத்த கொலைகளின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு காவல் துறையின் செயல்பாட்டை மதிப்பிடுவது பொருத்தமாக இருக்காது.
காவல் துறையின் செயல்பாட்டை மதிப்பிட வேண்டுமென்றால், ஒட்டுமொத்த கொலைகளின் எண்ணிக்கையை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல், ஆதாயக் கொலைகள் எண்ணிக்கையை மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
இதன் அடிப்படையில், 2010ல் 153 என இருந்த ஆதாயக் கொலைகளின் எண்ணிக்கை 2012ல், 137 ஆகக் குறைந்துள்ளது. எனவே, இந்த இரண்டு ஆண்டுகளில் ஆதாயக் கொலைகள் 10.45 சதவீதம் குறைந்திருப்பது காவல் துறையினர் சிறப்பாக பணியாற்றுவதையேக் காட்டுகிறது. விரைவில் மேலும் 19,000 காவலர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
எங்களைப் பொறுத்த வரையில், தடுக்கப்படக் கூடிய குற்றங்கள் தடுக்கப்பட வேண்டும், குற்றங்கள் குறைக்கப்பட வேண்டும், குற்றம் புரிந்தோர் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம் என்றார் ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications