நிலக்கரி ஊழல்: மன்மோகன் சிங் பதவி விலக மாட்டார்- சோனியா திட்டவட்டம்
டெல்லி: நிலக்கரி ஊழல் விவகாரத்தில் பிரதமர் மன்மோகன் சிங் ராஜினாமா செய்ய வேண்டும் என்ற பாஜக உள்ளிட்ட எதிர்க் கட்சிகளின் கோரிக்கையை காங்கிரஸ் தலைவர் சோனியா நிராகரித்துவிட்டார்.
நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழலில் பிரதமர் மன்மோகன் சிங் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் இரு அவைகளிலும் தொடர்ந்து அமளி நிலவி வருகிறது.
மேலும் இந்த விவகாரத்தில் மன்மோகன் சிங் பதவி விலக வேண்டும் என்று அத்வானி தலைமையில் கூடிய நாடாளுமன்ற பாஜக கட்சிக் கூட்டத்தில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
இதையடுத்து காங்கிரஸ் கட்சியின் மையக்குழு கூட்டம், கட்சி தலைவர் சோனியா காந்தி தலைமையில் நடந்தது. இந்தக் கூட்டத்தை தொடர்ந்து சோனியா காந்தியிடம் நிருபர்கள், பிரதமர் மன்மோகன் சிங் பதவி விலக வேண்டும் என்று கோரி பாஜக தீர்மானம் நிறைவேற்றி உள்ளது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், ‘‘அவர்கள் கேட்டு விட்டு போகட்டும்'' என்று பதிலளித்தார்.
பின்னர் நாடாளுமன்ற விவகாரத்துறை துறை அமைச்சர் கமல்நாத் நிருபர்களிடம் பேசுகையில், கடந்த 9 ஆண்டு காலத்தில் பிரதமர் மன்மோகன் சிங் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை பாஜக பலமுறை வைத்து விட்டது. முக்கியப் பிரச்சனையிலிருந்து திசை திருப்புவதற்காக பாஜக இப்படிப்பட்ட அரசியலை நடத்தி வருகிறது என்றார்.