மாமனார், மாமியாரை கவனிக்க மறுத்த பெண்ணிடமிருந்து கணவருக்கு விவாகரத்து: குஜராத் ஹைகோர்ட் தீர்ப்பு
அகமதாபாத்: குஜராத்தில் மாமனார், மாமியாரை கவனிக்க மறுத்ததுடன், அவர்களுக்கு உதவக் கூடாது என்று கணவரை தடுத்துள்ளார் ஒரு பெண் டாக்டர். இதை எதிர்த்து விவாகரத்து கேட்ட அவரின் டாக்டர் கணவருக்கு விவாகரத்து வழங்கி அம்மாநில உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குஜராத் மாநிலம் சூரத் நகரில் வசிப்பவர் டாக்டர் மிலிந்த்(பெயர் மாற்றப்பட்டுள்ளது). அவரது மனைவி டாக்டர் ஷீத்தல்(பெயர் மாற்றப்பட்டுள்ளது). கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமான அவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கடந்த 2007ம் ஆண்டு மிலிந்த் சூரத்தில் உள்ள குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கேட்டு மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், என் மனைவி என் பெற்றோரை எங்களுடன் தங்கவிட மறுக்கிறாள். இதனால் எனக்கு மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது. எனவே எனக்கு விவாகரத்து வழங்க வேண்டுமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்திருந்தார். ஆனால் அந்த நீதிமன்றம் கடந்த ஆண்டு அவரது மனுவை தள்ளுபடி செய்தது.
இதையடுத்து மிலிந்த் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார்.
அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது,
என் மனைவி என் பெற்றோரை எங்களுடன் தங்கவிட மறுக்கிறாள். மேலும் ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த என் தந்தையை சென்று பார்க்கக்கூட என்னை அனுமதிக்கவில்லை. அவர் இறந்த பிறகு என் தாயை எங்களுடன் தங்க அனுமதிக்கவில்லை. இதனால் அவர் தனியாக தங்கியுள்ளார். என் பெற்றோரை கவனிக்காமல் என்னையும் கவனிக்கவிடாமல் தடுக்கும் எனது மனைவியிடம் இருந்து விவாகரத்து அளிக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி பாஸ்கர் பட்டாச்சார்யா மற்றும் நீதிபதி ஜேபி பர்திவாலா அடங்கிய பெஞ்ச் மிலிந்த், ஷீத்தலின் திருமணத்தை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறியிருப்பதாவது,
பெற்றோர்களை உடன் வைத்து பராமரிக்கக் கூடாது என்று கணவனை நிர்பந்திப்பது பெண்களின் கொடூரமான மனநிலைக்கு ஒப்பானது. இதைப்போன்ற கொடூரமான மனநிலை கொண்ட மனைவியுடன் வாழ முடியாது என்ற மனுதாரரின் கோரிக்கையை ஏற்று மனைவியுடனான திருமண வாழ்வில் இருந்து அவருக்கு விவாகரத்து அளித்து தீர்ப்பளிக்கிறோம் என்று தெரிவித்துள்ளனர்.