மு.க.அழகிரி மருமகள் அனுஷா குரலில் பேசியும் மோசடி.. ஏமாந்த மிசா பாண்டியன்!
ஹலோ நான் அனுஷா பேசுறேன்... துரை தயாநிதியோட மனைவி.... என்ற குரலைக் கேட்ட உடன் தென் மாவட்ட திமுக புள்ளிகள் ஆடிப்போய் விடுகின்றனர். காரணம் இல்லாமல் இல்லை. அழகிரியின் மருமகள் அனுஷாவின் குரலில் பேசிய மோசடிக் கும்பல் தி.மு.க. முக்கியப் புள்ளிகள், தொழில் அதிபர்கள் சிலரிடம் அவசர உதவி என்ற பெயரில் பெரியளவில் மோசடியில் ஈடுபட்டுள்ளது.
ஏமாந்த மிசா பாண்டியன்
மதுரை மாநகர், மாவட்ட தி.மு.க. பொருளாளரும் முன்னாள் துணை மேயருமான மிசா.பாண்டியனையும் இந்த மோசடி கும்பல் ஏமாற்றியுள்ளது. துரை தயாநிதி தயாரிக்கும் படம் ஒன்றின் சினிமா படப்பிடிப்பு கோவையில் நடைபெறுவதாகவும், அவசரமாக அங்கே செல்ல கார் தேவைப்படுவதாகவும் அனுஷாவின் குரலில் பேசியுள்ளனர். அதை நம்பி காரை அனுப்பி வைத்துள்ளார் மிசா.பாண்டியன். பின்னர் தான், ஏமாற்றப்பட்டது தெரியவந்துள்ளது. உடனே மதுரை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார்.
பத்திரிக்கையாளர்களிடம் மிசா பாண்டியன் தான் ஏமாற்றப்பட்டது எப்படி என்று விவரித்தார்: "கடந்த 9ம் தேதி அழகிரி அண்ணனின் மருமகள் அனுஷா போன்ற குரலில் ஒரு பெண் என்னிடம் பேசினார். கோவையில் நடைபெறும் படப்பிடிப்புக்குச் செல்ல உடனே கார் வேண்டும் என்று கேட்டார். உடனே, அவர் சொன்ன இடத்திற்கு எனது காரை அனுப்பி, அவர் சொன்ன ஆளிடம் சாவியை ஒப்படைத்தேன்.
அதற்கு முந்தைய நாள், தயாநிதி ஒரு வழக்கு விசாரணைக்காக மதுரை கோர்ட்டில் ஆஜரானார். எனவே, அனுஷாவும் மதுரையில் தான் இருப்பார் என்று எண்ணினேன். என் வீட்டுக் கல்யாணத்துக்கு வந்தபோது அனுஷாவுடன் பேசியிருக்கிறேன். குரல் அச்சுப்பிசகாமல் அதேபோல இருந்ததால் நம்பிவிட்டேன். ஆனால் பிறகு தான் நான் ஏமாந்தது தெரிந்தது.
உஷாரான நான் என்னுடைய கார் எங்கே இருக்கிறது என்று விசாரித்த போது, கார் கோவைக்குச் செல்லவில்லை என்பது உறுதியானது. முள்ளை முள்ளால் தான் எடுக்க வேண்டும் என்று திட்டமிட்டேன். என்னைத் தொடர்பு கொண்ட அதே எண்ணில் அழைத்து, "தொலைதூரப் பயணத்திற்கு இன்னோவா கார் தான் நன்றாக இருக்கும். அதை அனுப்பி வைக்கிறேன்" என்று சொன்னேன்.
15 லட்ச ரூபாய் கார்
அதன்படி '8 லட்ச ரூபாய் காருக்குப் பதில் 15 லட்ச ரூபாய் கார் கிடைக்கிறதே' என நினைத்து அவர்கள் கரூர் அருகே சாலையோர பேக்கரி ஒன்றுக்கு வந்தார்கள். அங்கே என்னுடைய ஆட்களுடன் நான்கைந்து காரில் போய் இறங்கினோம். உடனே அவர்கள் காரை விட்டுவிட்டு ஓடிவிட்டார்கள். அவர்கள் யார் என்று என்னுடைய டிரைவருக்கு அடையாளம் தெரியும். அவர்களைக் கைது செய்யக் கோரியும், இதுபோன்ற மோசடிகள் தொடராமல் இருக்கவும் தான் போலீஸில் புகார் செய்துள்ளேன்" என்றார்.
ஏமாந்த லிஸ்ட் அதிகம்
மிசா பாண்டியனைப் போலவே ராதாபுரம் முன்னாள் எம்.எல்.ஏ. அப்பாவு, ஆண்டிப்பட்டி ஒன்றிய செயலாளர் வைகை சேகர் உள்ளிட்ட சிலரும் ஏமாந்திருக்கிறார்கள்.
அனுஷா அறிக்கை
இந்த மோசடி விவகாரம் அனுஷாவிற்குத் தெரியவரவே அவசரம் அவசரமாக அறிக்கை விட்டுள்ளார் அனுஷா.
"என்னைப் போல் குரல் மாற்றிப் பேசியும், என்னுடைய செயலாளர் என்று கூறியும் ஆனந்த் சர்மா என்பவர் மோசடி வலை விரித்து வருகிறார். அதை நம்பி யாரும் ஏமாற வேண்டாம். மோசடி செய்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்" என்று கூறியுள்ளார் அனுஷா.