லால்குடி அருகே பெண் எரித்துக் கொலை: கற்பழிப்பா? என போலீஸ் தீவிர விசாரணை
திருச்சி: இன்று காலை திருச்சி மாவட்டம் லால்குடி ரயில் நிலையம் அருகே உள்ள தண்டவாளத்தில் பெண் ஒருவர் எரித்துக் கொல்லப்பட்ட நிலையில் பிணமாகக் கிடந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த லால்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டார்.
இறந்து கிடந்த பெண் 35 வயது மதிக்கத்தக்கவராக இருந்தார். நைட்டி மட்டும் அணிந்திருந்த அவர் உடல் பெட்ரோல் போன்ற ஒரு எரிபொருளால் எரிக்கப்பட்டிருந்தது. உடல் முழுவதும் அடையாளம் காண முடியாதபடி தீயில் கருகியிருந்தது. ஒரு கை மட்டும் எரியாத நிலையில் இருந்தது. உடல் கிடந்த இடம் அருகே பெண்கள் அணியும் செருப்பு கிடந்தது.
சம்பவ இடத்திற்கு வந்த கைரேகை நிபுணர் பெருமாள் தடயங்களை சேகரித்தார். மேலும் மோப்ப நாய் ஜாக் மூலம் துப்பு துலக்கப்பட்டது. அது சுமார் அரை கிலோ மீட்டர் தூரம் ஓடி அங்குள்ள சுடுகாட்டில் நின்றது. அந்த பெண்ணை கடத்தி வந்து சுடுகாட்டில் வைத்து கொன்று பின்னர் தண்டவாளத்தில் போட்டு பெட்ரோல் ஊற்றி எரித்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? கடத்தி வந்து கற்பழிக்கப்பட்டாரா? என்பது போன்ற பல கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தண்டவாளத்தில் போட்டால் உடல் மீது ரயில் ஏறி அடையாளம் தெரியாமல் போகும் என்ற எண்ணத்தில் கொலையாளிகள் அங்கு உடலை போட்டுச் சென்றுள்ளனர்.
ஆனால் அந்த தண்டவாளம் சென்னை-திருச்சி பாதையில் போடப்பட்டு வரும் 2-வது ரயில் பாதையாகும். இதில் பணிகள் முடிந்து வெள்ளோட்டம் முடியாததால் இன்னும் ரயில் போக்குவரத்து தொடங்கப்படவில்லை. எனவே தான் உடல் எந்த சேதமும் அடையவில்லை. இதனால் கொலையாளிகளின் நோக்கம் நிறைவேறவில்லை.
சம்பவ இடத்திற்கு அரியலூர் ரயில்வே போலீசார் வருவதில் தாமதம் ஏற்பட்டதால் 10.30 மணி வரை உடல் தண்டவாளத்தில் இருந்து மீட்கப்படவில்லை. இச்சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.