பெங்களூரில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த அதிமுக வேட்பாளர் கைது
பெங்களூர்: பெங்களூர் ராஜாஜி நகரில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக அதிமுக வேட்பாளர் முனுசாமி கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
கர்நாடக சட்டசபை தேர்தல் வரும் மே மாதம் 5ம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி பாஜக, காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம், அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் பெங்களூர் ராஜாஜி நகர் பகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் முனுசாமி என்பவர் தனது மகன் தாமோதரன், கட்சி நிர்வாகி பாபு உள்ளிட்ட கட்சியினருடன் சேர்ந்து 5வது பிளாக்கில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக நேற்று போலீசாருக்கு தகவல் வந்தது.
இதையடுத்து மாகடிசாலை காவல் நிலைய ஆய்வாளர் ஸ்ரீதர் பூஜார் தலைமையிலான போலீசார் ராஜாஜி நகருக்கு விரைந்து சென்று முனுசாமி, அவரது மகன் தாமோதரன், பாபு, கிருஷ்ணகிரி நகர்மன்றத் தலைவர் தங்கமுத்து, வேலூர் கிழக்கு மாவட்ட அதிமுக செயலர் ஏழுமலை, ஓசூர் ஒன்றிய அதிமுக பொருளாளர் ஜெகதீஷ் உள்ளிட்ட 23 பேரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.
அப்போது முனுசாமி, தாமோதரன் மற்றும் பாபுவிடம் இருந்து ரூ.11,800 ரொக்கத்தை பறிமுதல் செய்தனர். மேலும் அந்த 3 பேரையும் கைது செய்து மற்றவர்களை விசாரித்துவிட்டு அனுப்பினர். அதன் பிறகு கைது செய்யப்பட்ட 3 பேரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.