மீன் சைவமா?: மகாவீர் ஜெயந்திக்கு மீன் கடைக்கு மட்டும் ஏன் விதிவிலக்கு- இறைச்சி கடையினர்
கோவை: மகாவீர் ஜெயந்தி உள்பட 5 நாட்களுக்கு மட்டன், சிக்கன் கடைகளுக்கு அரசு தடைவிதித்துள்ளது. அதனால் நேற்று மீன் கடைகள் வழக்கத்தை விட கூட்டமாக காணப்பட்டன். மீனுக்கு மட்டும் ஏன் விதிவிலக்கு என இறைச்சிக்கடை வியாபாரிகள் போராட்டத்தில் குதித்தனர்.
மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு நேற்று அரசு விடுமுறை விடப்பட்டது. ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட இறைச்சி மற்றும் மதுபானம் விற்க தடை விதிக்கப்பட்டது. மாநகராட்சி சார்பில் இயங்கும் ஆடு, மாடு அறுவை மனைகளுக்கும் விடுமுறை விடப்பட்டது.
ஆனால், மீன் விற்பனை வழக்கம்போல் நடந்தது. மொத்த மார்க்கெட், சில்லரை மார்க்கெட்களில் கூட்டம் நிரம்பி வழிந்தது. தமிழகத்தில் மீன்பிடி தடை காலம் தற்போது நிலவுவதால் பிற மாநில கடல் பகுதிகளில் இருந்தும், தமிழகத்திலுள்ள பல்வேறு அணை, குளங்களில் இருந்தும் நேற்று வழக்கம்போல் மீன்கள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டன.
இதனால், ஆடு, மாடு, கோழி இறைச்சி விற்பனையாளர்கள் கோபம் அடைந்துள்ளனர். மீன் விற்பனைக்கும் தடை விதிக்கவேண்டும் என வலியுத்தியுள்ளனர்.
சைவநாட்கள்...
இதுபற்றி அவர்கள் கூறியதாவது:மகாவீர் ஜெயந்தி, கிருஷ்ண ஜெயந்தி, வள்ளலார் தினம், திருவள்ளுவர் தினம், காந்தி ஜெயந்தி ஆகிய 5 நாட்கள் இறைச்சி விற்க தமிழக அரசு தடை விதித்துள்ளது.
மீனுக்கும் தடை வேண்டும்...
ஆனால், இந்த நாட்களில் கடல் மீன், டேம் மீன் மற்றும் குளத்து மீன் விற்க அனுமதிக்கப்படுகிறது. மேற்கண்ட 5நாட்களில் மீன் விற்கவும் தடை விதிக்க வேண்டும்.
பழைய இறைச்சியா..?
ஆடு, மாடு, கோழி கடைகளுக்கு விடுமுறை. ஆனால், அசைவ ஓட்டல்களில் இந்த வகை இறைச்சி உணவு எப்படி விற்கப்படுகிறது. முந்தைய நாள் வாங்கி இருப்பு வைத்துவிட்டு, மறுநாள் சமையல் செய்து வழங்குகிறார்கள். இது சுகாதார சீர்கேட்டை உருவாக்கும். எனவே, அசைவ உணவகங்களுக்கும் தடை விதிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
நஷ்டமாகும்...
நேற்று காலையில் மேலப்பாளையம் போலீசார், ஆடு, கோழி இறைச்சி கடைகளுக்கு சென்று அடைக்க வலியுறுத்தினர். ஆனால் கடைக்காரர்கள் ஆடு, கோழிகளை வெட்டிய பின்னர் அடைத்தால் கடுமையான நஷ்டம் ஏற்படும் எனக்கூறி கடை களை அடைக்க மறுத்தனர்.
முற்றுகை...
போலீசார் தொடர்ந்து வற்புறுத்தியதால், அவர்கள் கடை களை அடைத்து விட்டு மேலப்பாளையம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். பின்னர் போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இதன்பின்பு இறைச்சி கடைக்காரர்கள் வழக்கம்போல கடைகளை திறந்து வியாபாரம் செய்தனர்.
தடை ஏன் இல்லை...
இதுபற்றி மாநகராட்சி சுகாதார பிரிவு அதிகாரி ஒருவர் கூறுகையில், "மீன் அசைவமும் இல்லை; சைவமும் இல்லை என்ற கருத்து நிலவுவதால் மீனுக்கு இறைச்சி வகையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விதிவிலக்கா...
சில மாவட்டங்களில், மாவட்ட நிர்வாகம் மற்றும் உள்ளாட்சி நிர்வாகங்களின் முடிவுக்கு ஏற்ப மீன் விற்பனைக்கு தடை விதிக்கப்படுகிறது. கோவை உள்ளிட்ட சில முக்கிய நகரங்களில் மீன் விற்பனைக்கு தடை விதிக்கப்படவில்லை என்றார்.