எலும்பு மஜ்ஜை தானத்தை எதிர்பார்த்து காத்திருக்கும் இந்திய பேராசிரியை... பேஸ்புக்கில் தேடல்!
கேரளத்தை பூர்வீகமாகக் கொண்டவர் நளினி அம்பாடி. அமெரிக்காவின் ஸ்டான்போர்டின் பேராசிரியர், இரண்டு பருவ வயது பெண்களின் தாய் என்ற அடையாளங்களைத் தாண்டி தற்போது வேறு ஒன்றாலும் மற்றவர்கள் கவனத்தை தன் மீது திருப்பியுள்ளார். ஆம், அவர் தற்போது லுக்கீமியாவால் பாதிக்கப்பட்டிருக்கிறார்.
லுக்கீமியா எனப்படுவது ரத்தம் மற்றும் எலும்பு மஜ்ஜை புற்றுநோய் பாதிப்பு ஆகும். எலும்பு மஜ்ஜை (Bone marrow) என்பது எலும்புகளின் உட்பகுதியில் காணப்படும் மென்மையான இழையமாகும். சிவப்பு என்பு மச்சையிலிருந்து குருதிச் சிவப்பணுக்கள், குருதி வெள்ளை அணுக்கள் மற்றும் குருதிச் சிறுதட்டுக்கள் உற்பத்தியாகின்றன.
இவருக்கு எலும்பு மஜ்ஜை தானம் தேவைப்படுகிறது. அமெரிக்காவில் தேடிப்பார்த்தும் கிடைக்காததால், தற்போது தெற்காசியாவில் இருந்து யாராவது எலும்பு தானம் தருவார்களா என்ற எதிர்பார்ப்பில் உள்ளார் நளினி.
அவரது மாணவர்கள் சிலர் இணைந்து நளினிக்காக பேஸ்புக்கில் பிரச்சாரத்தை துவக்கியுள்ளனர். அமெரிக்காவில் எலும்பு மஜ்ஜை தானம் செய்ய பதிவு செய்துள்ள லட்சக்கணக்கானோரில் உடல், செல் தகுதிகள் நளினிக்கு பொறுத்தமானதாக இல்லை.
எனவே, கேரளத்தை பூர்வீகமாகக் கொண்ட நளினிக்கு தெற்கு ஆசியப் பகுதியில் இருந்தா தான் சரியான எலும்பு மஜ்ஜை கிடைக்கலாம் என்று கருதப்படுகிறது.
இதனால் தான் பேஸ்புக்கோடு சேர்த்து தற்போது http://www.nalinineedsyou.com/ என்ற இணையதளத்தையும் துவக்கி எலும்பு மஜ்ஜை தேவை குறித்து கோரிக்கை வைத்துள்ளனர்.
இந்த இணையத்தளத்தின் பலன் நளினியோடு முடிந்துவிடாது. இதில் பதிவு செய்பவரின் விவரங்களை 'லுக்கீமியா' சம்பந்தமான உதவிகள் தேவைப்படும் போது மற்றவர்களும் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் சேமிக்கப்பட்டு வருகிறது.