கோவை தீ விபத்து: கட்டிடத்தை இடிக்க கலெக்டர் உத்தரவு
கோவை: கோவையில் தீ விபத்து நிகழ்ந்து வணிக வளாக கட்டிடம் விதி முறை மீறி கட்டப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. எனவே அனுமதி பெறாமல் கட்டப்பட்ட இரண்டு தளங்களை இடிக்க மாவட்ட கலெக்டர் கருணாகரன் உத்தரவிட்டுள்ளார்.
கோவை - அவினாசி சாலையில் உள்ள தனியார் வணிக வளாகத்தில் நேற்று ஏற்பட்ட தீ விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். இந்த வணிக வளாகம், சித்தாபுதூரில் வசிக்கும் தேவராஜ் என்பவரின் மகன் ராஜேஸ் என்பவருக்குச் சொந்தமானது.
கடந்த 1999ம் ஆண்டு இந்த கட்டடத்துக்கு, கோவை உள்ளூர் திட்டக்குழும்ம் திட்ட அனுமதி உள்ளது.
தரைத்தளம் மற்றும் முதல் தளத்திற்கு மட்டுமே அனுமதி வழங்பட்டுள்ளது. விதிகளை மீறி மேலும் இரண்டு தளங்கள் கட்டப்பட்டுள்ளது இப்போது தெரியவந்துள்ளது.
தீ விபத்து ஏற்பட்ட பின்னர் இது தொடர்பான ஆவணங்களை ஆய்வு செய்த பின்னர் இது தெரியவந்தது. உள்ளூர் திட்டக்குழுமத் தலைவரும், கோவை மாவட்ட கலெக்டருமான கருணாகரன், தீவிபத்து ஏற்பட்ட கட்டிடம் அனுமதியின்றி கட்டப்பட்டிருப்பது உண்மைதான் என்று தெரிவித்தார். அதனால் இரண்டு தளங்களையும் இடிக்க உடனடியாக நோட்டீஸ் வழங்குமாறு உள்ளூர் திட்டக்குழுமத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.