சிவகாசி பட்டாசு ஆலை விபத்தில் 4 பேர் பலி: விதிமீறி பட்டாசு தயாரித்ததால் விபத்து
சிவகாசி: சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 4 பேர் பலியாகினர். 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
நாராயணபுரத்தில் உள்ள ரத்னா பயர் ஒர்க்ஸ் ஆலை இயங்கி வருகிறது. தமிழ்நாடு பட்டாசு உற்பத்தியாளர் சங்க தலைவர் விஜயகுமாருக்கு சொந்தமான இந்த ஆலையில் 20க்கும் மேற்பட்ட அறைகளில் பட்டாசு தயாரிக்கும் பணி இன்று நடந்து வந்தது
வழக்கமாக ஞாயிற்றுக்கிழமைகளில் பட்டாசு ஆலைகளுக்கு விடுமுறை அளிக்கப்படும். ஆனால் இங்கு விதிமுறைகளை மீறி ரத்னா பயர் ஒர்க்ஸ் ஆலையில் இன்று காலை 10 மணிக்கு பட்டாசு தயாரிக்கும் பணி நடந்தது.
மணிமருந்து விபத்து
பேன்சி ரக பட்டாசு தயாரிப்பதற்கான மூலப்பெருளான மணி மருந்து என்னும் அபாயகரமான மருந்து கலவை தயாரிக்கும் பணியை சிவகாசியை சேர்ந்த செல்லையா, கனி, மாரிமுத்து ஆகிய மூன்று பேர் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது திடீரென ஏற்பட்ட உராய்வில் மணி மருந்து வெடித்து தீப்பிடித்தது. இதில் செல்லை, கனி, மாரிமுத்து ஆகியோர் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.
அந்த அறையின் அருகே பட்டாசுகளை காயவைக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த மதுரைவீரன், தங்கப்பாண்டியன், நடராஜன், பால்பாண்டி, கருப்பசாமி, முருகன், பவுல் ஆகிய 7 பேருக்கும் பலத்த தீக்காயம் ஏற்பட்டது.
தகவல் அறிந்த உடன் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்தனர்.
இறந்தவர்களின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த தீ விபத்தில் பலத்த தீக்காயம் அடைந்தவர்கள் சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விதி முறைகளை மீறி பட்டாசு தயாரித்ததே இந்த விபத்திற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.
விபத்து நடந்த ஆலையை வருவாய்த்துறை அதிகாதிகளும், போலீசாரும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.