சென்னையில் ரூ. 1,000 கோடிக்கு சாலை போட்டார்களாமே?.. அது எந்தெந்த சாலை?.. ஸ்டாலின் கேள்வி
அவர் கூறுகையில், சென்னை மாநகரத்தின் மேயர் சைதை துரைசாமி என்மீது வழக்கு போடப்போவதாக ஒரு அறிக்கை வெளியிட்டு இருக்கிறார். எதற்கு என்றால் சென்னை மாநகராட்சியினுடைய ஊழல்களை பற்றி, நிர்வாக சீர்கேடுகளை பற்றி அண்மையில் என்னுடைய தலைமையில் நடைபெற்ற ஒரு ஆர்ப்பாட்டத்தை மையமாக வைத்து சில விவரங்களை கேட்டிருந்தேன்.
அதற்கு அவர் அதை நிரூபித்தால் நான் ஏற்றுக்கொள்வேன். அதை நிரூபிக்கவில்லை என்று சொன்னால் வழக்கு போடுவேன் என்று சொல்லியிருக்கிறார். எனவே குற்றச்சாட்டு சொல்லியிருப்பது நான். அவர் தான் என் மீது முதலில் வழக்கு போடவேண்டும். அவர் வழக்கு போட்டால் சந்திப்பதற்கு நான் தயாராக இருக்கிறேன்.
சென்னை மாநகராட்சி மேயர் துரைசாமி ஒன்றரை ஆண்டு காலத்தில் 4,000 கோடி ரூபாய்க்கு திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும், 1000 கோடி ரூபாய்க்கு சாலைகள் போடப்பட்டு இருப்பதாகவும் அவர் தன்னுடைய அறிக்கையில் தெரிவித்திருந்தார்.
ரூ. 4,000 கோடிக்கு மேல் பணிகள் நடைபெற்று இருந்தால் அந்த பணிகள் என்னென்ன? ரூ.1000 கோடிக்கு சாலைகள் போடப்பட்டு இருந்தால் அந்த சாலைகள் எங்கெங்கு போடப்பட்டு உள்ளது என்பதை பற்றி ஒரு வெள்ளை அறிக்கையை மேயர் வெளியிடுவாரா? அப்படி வெளியிட்டால் அதை நான் ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறேன் என்று கூறினேன். இந்த கேள்வியை நான் கேட்டு 2 வாரமாகிறது. அதற்கு எந்த விளக்கமும் இதுவரை கிடையாது.
அம்மா உணவகம் என்ற ஒரு திட்டத்தை மாநகராட்சி நிறைவேற்றிக்கொண்டிருக்கிறது. மலிவு விலையில் அம்மா உணவகத்தை நடத்துவதில் எங்களுக்கு எந்தவித மாறுபாடான கருத்தும் கிடையாது. அம்மா உணவகத்தை பொறுத்தவரையில் சும்மா போட்டாலும் அதை வரவேற்க நாங்கள் தயாராக இருக்கிறோம். ஆனால் மாநகராட்சி பணியை கவனிக்க கூடிய அதிகாரிகள், ஊழியர்கள் இந்த திட்டத்திற்காக பயன்படுத்தப்படுத்தப்படுகிறார்கள்.
இதை எல்லாம் மூடி மறைக்க கூடிய வகையில் என் மீது வழக்கு போடுவதாக அறிவித்துள்ளார் என்றார் ஸ்டாலின்.