ராமதாஸ் மீது வழக்கு: முதல்வருக்கு திருமாவளவன் நன்றி
இது குறித்து திங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:
மரக்காணம் வன்முறை தொடர்பாக சட்டப்பேரவையில் கொண்டு வரப்பட்ட கவன ஈர்ப்புத் தீர்மானத்துக்குப் பதில் அளித்துப் பேசிய முதல்வர் ஜெயலலிதா, மாமல்லபுரம் விழாவில் காவல் துறையின் நிபந்தனைகளை மீறிய டாக்டர் ராமதாஸ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
அத்துடன், அவ்விழாவில் பங்கேற்றவர்களில் பெரும்பாலானவர்கள் குடிபோதையில் இருந்ததையும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் வன்முறையில் ஈடுபட்டதையும் ஆபாசமாகப் பேசியதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்விழாவுக்கு வந்தவர்கள் போலி பதிவு எண் கொண்ட வாகனங்களில் வந்துள்ளது விசாரணையில் தெரிய வந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
அப்பாவி தலித் மக்களின் குடிசைகள், அரசு பஸ்கள், தனியார் வாகனங்களை கொளுத்தியதையும் அம்பலப்படுத்தியுள்ளார். மாநாட்டிற்கு வந்தவர்கள் தாறுமாறாக வண்டி ஓட்டியதில் ஏற்பட்ட விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதையும் தெளிவுபடுத்தியுள்ளார்.
நிகழ்ச்சி முடிந்து வீடு திரும்பும்போது வழியில் பிற கட்சிகளின் கொடிகளையும் விளம்பர பேனர்களையும் சேதப்படுத்தியுள்ளனர் என்றும், வாலாஜாபாத் அருகே திடீர் சாலை மறியலில் ஈடுபட்டு பொதுமக்களுக்கு இடையூறு செய்ததையும் குறிப்பிட்டிருக்கிறார்.
வாய்மையே வெல்லும், ஜனநாயகமே நிலைக்கும் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் சரியான நேரத்தில் உண்மையை உரக்கச் சொல்லிய முதல்வருக்கு விடுதலைச் சிறுத்தைகளின் கட்சியின் சார்பில் நன்றி. இவ்வாறு திருமாவளவன் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.