காந்தியின் பொருட்களை ஏலம் விடுவதை எதிர்த்து போராட்டத்தில் குதிக்கும் கிரிராஜ் கிஷோர்
கான்பூர்: லண்டனில், மகாத்மா காந்தி பயன்படுத்திய பொருட்களை ஏலம் விடுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என சோனியாகாந்திக்கு பிரபல எழுத்தாளர் கிரிராஜ் கிஷோர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஏற்கனவே, மகாத்மா காந்தி பயன்படுத்திய கண் கண்ணாடி, ராட்டை, கைக்கடிகாரம் மற்றும் கடிதங்கள் கடந்த ஆண்டு (2012) ஏப்ரல் மாதம் 17-ந் தேதி அன்று லண்டனில் ஏலம் விடப்பட்டன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மே 21-ந் தேதி அன்று பிரபல எழுத்தாளர் பத்மஸ்ரீ கிரிராஜ் கிஷோர், அப்போதைய குடியரசுத் தலைவர் பிரதிபாபட்டீலுக்கு கடிதம் எழுதினார். இதுகுறித்து விசாரிப்பதாக அவரிடமிருந்து பதில் கடிதமும் கிடைத்தது.
இதனை தொடர்ந்து பிரதமர் மன்மோகன் சிங்கிற்கும் பண்பாட்டுத்துறைக்கும் கிரிராஜ் கிஷோர் கடிதம் எழுதினார். ஆனால் எந்தவித பதிலோ, நடவடிக்கையோ எடுக்கப்படவில்லை. இதனால், தனது எதிர்பார்ப்பை வெளிப்படுத்தும் விதமாக எழுத்தாளர் கிரிராஜ், தனக்கு கிடைத்த பத்மஸ்ரீ விருதை கான்பூர் மாவட்ட நிர்வாகத்திடம் திருப்பி ஒப்படைக்க முயன்றார். ஆனால் அதிகாரிகள் அவரை சமரசப்படுத்தினர்.
மகாத்மா காந்தி பயன்படுத்திய பொருட்கள் ஏலம் விடப்படுவதை தடுக்கும் பொருட்டு, ‘ஏலத்திலிருந்து காந்தியின் விடுதலை' என்ற தலைப்பிலான ஒரு புத்தகத்தையும் கிரிராஜ் வெளியிட்டார். இந்த நிலையில் மகாத்மா காந்தி 1921-ம் ஆண்டு எழுதிய முக்கியமான கடிதங்கள், பயன்படுத்திய டம்ளர், யானை தந்தத்தால் செய்யப்பட்ட 3 குரங்கு சிலைகள் ஆகியவை வருகிற 21-ந் தேதி அன்று லண்டனில் ஏலம் விடப்பட இருக்கின்றன.
இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எழுத்தாளர் கிரிராஜ் கிஷோர் ஏற்கனவே காங்கிரஸ் கட்சி தலைவி சோனியா காந்திக்கு கடிதம் எழுதி இருந்தார். இதன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சோனியா காந்தியிடம் இருந்து பதில் கடிதமும் கிடைத்தது.
ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. காந்தியின் பொருட்கள் வருகிற 21-ந் தேதி அன்று லண்டனில் ஏலத்துக்கு வருவது உறுதியாகி உள்ளது. இதனால் கவலை அடைந்துள்ள கிரிராஜ் கிஷோர், மகாத்மா காந்தியின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கடிதங்கள் ஏலத்துக்கு வருவதை தடுப்பதற்காக போராட்டத்தில் குதிக்கப்போவதாக அறிவித்துள்ளார். பொது இடத்தில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.