உப்பளங்களை கையகப்படுத்த எதிர்ப்பு: உப்பு உற்பத்தியாளர்கள் வேலை நிறுத்தம்
தூத்துக்குடி: அனல் மின்நிலையத்திற்கு நிலக்கரி கொண்டு வருவதற்காக கப்பல் கட்டும் தளம் அமைக்க உப்பளங்களை கையகப்படுத்துவதை எதிர்த்து தூத்துக்குடி சுற்றுவட்டாரப்பகுதிகளில் உப்பு உற்பத்தியாளர்கள் இன்று ஒருநாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தியாவில் உப்பு உற்பத்தியில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் உள்ளது.இதில் 90 சதவீதம் அளவுக்கு தூத்துக்குடி பகுதியில் இருந்து உற்பத்தி செய்யப்படுகிறது.
தூத்துக்குடியில் சுமார் 22 ஏக்கர் பரப்பளவில் உப்பு உற்பத்தியாகிறது. இதில் தன்பாடு பகுதியில் சுமார் 11 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் 12 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது.
உப்பு வாருதல்,சுமைகள்,மூடை பிடித்தல், உப்பு அரவை, பண்டல் போடுதல், என இத்தொழிலை நம்பி சுமார் 2 லட்சம் தொழிலாளர்கள் உள்ளனர்.
தற்போது தூத்துக்குடியில் புதிய அனல் மின் நிலையத்திற்கு நிலக்கரி கொண்டு வருவதற்காக புதிய கப்பல் கட்டும் தளம் அமைக்க மத்திய அரசு முடிவு செய்து பூர்வாங்க பணிகள் நடந்துவருகிறது. இதற்காக முள்ளக்காடு, முத்தையாபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள தன்பாடு உப்பளங்களை கையகப்படுத்த அரசு உத்தேசித்துள்ளாக தெரிகிறது. இதனால் 1 லடசம் மக்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்படும்.
எனவே இதுகுறித்து தன்பாடு, கோவளம், சிறிய அளவு உப்பு உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் முதல்வருக்கு மனு அளித்துள்ளனர்.
மேலும் இன்று 27ம் தேதி கோவளம், பசுவந்தரை, தன்பாடு சிறிய அளவு உற்பத்தியாளர்கள் வேலை நிறுத்தம் செய்து உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.
இதனால் முத்தையாபுரம், முள்ளக்காடு, கோவளம், தங்கம்மாள்புரம், சவேரியர்புரம் உள்ளிட்ட பகுதிகளில் உப்பளங்கள் மற்றும் அதை சார்ந்த பணிகள் பாதிக்கப்பட்டன.












Click it and Unblock the Notifications