அனல் காற்று… ஆந்திராவில் வெயிலின் கொடுமைக்கு 524 பேர் பலி... குண்டூரில்தான் அதிகம்
ஹைதராபாத்: ஆந்திராவில் வெப்பத்தின் தாக்கத்திற்கு பலியானவர்களின் எண்ணிக்கை 524 ஆக உயர்ந்துள்ளதாக, அம்மாநில பேரிடர் மேலாண்மை ஆணையர் தெரிவித்துள்ளார். அனல் காற்று வீசுவது கடுமையாகக் கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
நாடுமுழுவதும் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் ஆந்திரா மாநிலத்தில் அனலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. வெயிலின் கொடுமை தாங்காமல் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மாநிலம் முழுவதும் இதுவரை 524 பேர் உயிரிழந்துள்ளதாக புள்ளிவிபரம் தெரிவிக்கிறது. இவர்களில் பெரும்பாலானவர்கள் முதியவர்கள்.
அரசு நிதி உதவி
வெயிலின் தாக்கத்தால் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு 50 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என ஆந்திர மாநில அரசு அறிவித்துள்ளது. எனினும், இதனைப் பெறுவதற்கு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் பிரேதப் பரிசோதனை மற்றும் முதல் தகவல் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
குண்டூரில் அதிகம்
கடந்த ஏப்ரல் 1-ம் தேதி முதல் நேற்று வரை கடலோர மாவட்டமான குண்டூரில் அதிகபட்சமாக 95 பேர் வெயிலின் கடுமையை தாங்க முடியாமல் உயிரிழந்துள்ளனர்.
இதேபோல் பிரகாசம் மாவட்டத்தில் 75 பேரும், கிழக்கு கோதாவரியில் 60 பேரும், நல்கொண்டா மாவட்டத்தில் 47 பேரும், அதிலாபாத் மற்றும் கரீம் நகர் மாவட்டத்தில் தலா 43 பேரும் உயிரிழந்துள்ளனர்.
அனல் காற்று அதிகமாகும்
அடுத்த சில நாட்களுக்கு கடலோர மாவட்டங்களான குண்டூர், கிழக்கு கோதாவரி, மேற்கு கோதாவரி, விசாகப்பட்டினத்தில் கடுமையான வெயில் காணப்படும் எனவும், வாரங்கல், கரீம் நகர் மற்றும் தெலுங்கானாவில் அடுத்த 48 மணி நேரத்திற்கு அனல் காற்று வீசக் கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடமாநிலங்களில் அனல்
வட மாநிலங்களில் தொடர்ந்து கடும் வெப்பம் நிலவி வருகிறது. தலைநகர் டெல்லியிலும் வெப்பநிலை குறையவில்லை. டெல்லியின் நேற்று அதிகபட்ச வெப்பநிலை 43 புள்ளி 6 டிகிரி செல்சியஸாக இருந்தது.
ராஜஸ்தானின் ஸ்ரீகங்கா நகரில் 43 புள்ளி 5 டிகிரி வெப்பநிலையும் ஜெய்ப்பூரில் 41. 2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் நிலவியது.அதிகபட்சமாக உத்தரப் பிரதேச மாநிலம் எத்வா நகரில் அதிகபட்சமாக 46 புள்ளி 7 டிகிரி செல்சியஸ் வெப்பம் நிலவியது.












Click it and Unblock the Notifications