பயங்கரவாதத்தை ஒருபோதும் சகித்துக்கொள்ளக் கூடாது: நரேந்திர மோடி ஆவேசம்
அகமதாபாத்: சத்தீஸ்கரில் காங்கிரஸ் பேரணியில் கலந்து கொண்ட அக்கட்சி தலைவர்கள் மீது நக்சலைட்டுகள் தாக்குதல் நடத்தியதற்கு குஜராத் முதல்வர் நரேந்திர மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சத்தீஸ்கர் மாநிவம் பஸ்தார் மாவட்டத்தில் நேற்று முன்தினம் காங்கிரஸ் சார்பில் பரிவர்தன் பேரணி நடந்தது. சாதாரண மக்களைப் போன்று உடையணிந்த சுமார் 250 நக்சலைட்டுகள் இந்த பேரணியில் கலந்து கொண்ட காங்கிரஸ் தலைவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். மேலும் சத்தீஸ்கர் மாநில காங்கிரஸ் தலைவர் நந்த் குமார் பட்டேல் மற்றும் அவரது மகனை கடத்திச் சென்றனர்.
கடத்திச் செல்லப்பட்ட இருவரின் உடல்களும் நேற்று கண்டுபிடிக்கப்பட்டது. இந்த தாக்குதலில் மூத்த காங்கிரஸ் தலைவர் மகேந்திர கர்மா உள்பட 25 பேர் பலியாகினர்.
இந்த தாக்குதலுக்கு குஜராத் முதல்வர் நரேந்திர மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பயங்கரவாதத்தை நாம் ஒருபோதும் சகித்துக் கொள்ளக் கூடாது என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
இது நம் ஜனநாயகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல். பலியானவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமாக வேண்டிக் கொள்கிறேன். நம் ஜனநாயகத்தை அச்சுறுத்தும் நக்சலைட்டுகளை எதிர்த்து நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து போராட வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications