மாவோயிஸ்டுகளின் சத்தீஸ்கர் தாக்குதலும், சல்வா ஜூதும் அமைப்பும்!

ஆந்திரா, ஒடிஷா, சத்தீஸ்கர், மகாராஷ்டிரா என விரிந்து பரந்து கிடக்கும் தண்டகாருண்ய காடுகளும் பழங்குடி மக்களும்தான் மாவோயிஸ்டுகளின் வலிமை வாய்ந்த பிரதேசம்.. இதில் குறிப்பாக சத்தீஸ்கரின் தண்டேவடா, பஸ்தர் பிரதேசங்கள் மாவோயிஸ்டுகளின் கொடி பறக்கும் கோட்டை... இதேபோல்தான் இதர மாநிலங்களிலும் பழங்குடி இன மக்கள்தான் மாவோயிஸ்டுகளுக்கு ஆதார பலம்.. இந்த ஆதார பலத்தை சிதைக்கும் முயற்சியாகத்தான் 1991ல் உருவானது ஜன் ஜாக்ரன் அபியான்... அதாவது நிலமற்ற பழங்குடி மக்களுக்கு நிலத்தை பகிர்ந்து கொடுக்கும் இயக்கம்தான் இது.. இந்த இயக்கத்தை உருவாக்கியவர் மகேந்திர கர்மா..
இதே பஸ்தர், தண்டேவடா பகுதிகள் தாது வளங்கள் நிறைந்த பிரதேசம். இதனால் பன்னாட்டு நிறுவனங்கள் இங்கு நிலங்களைக் கையகப்படுத்த முயற்சிகளை மேற்கொண்டது. ஆனால் மாவோயிஸ்டுகள் என்ற பெரும்தடைதான் முட்டுக்கட்டையாக இருந்தது. இதனால் மாவோயிஸ்டுகளுக்கு ஆதரவாக இருக்கும் பழங்குடி மக்களை பிரிக்க அரசால் உருவாக்கப்பட்டதுதான் சல்வா ஜூதும் என்ற அமைப்பு.
இதன் தலைவராக இருந்தவர் தற்போதைய தாக்குதலில் கொல்லப்பட்ட மகேந்திர கர்மாதான். சல்வா ஜூதும் என்பது கோண்டி மொழியில் சுத்தகரிப்பு வேட்டை எனப் பெயர். 2006ம் ஆண்டு இந்த சல்வா ஜூதும் தொடங்கப்பட்டது. இது ஒரு ஆயுதப் படை. பழங்குடியின மக்களைக் கொண்டது. பழங்குடியின மக்களை அவர்களது சொந்த கிராமங்களில் இருந்து வெளியேற்றி நிவாரண முகாம்களில் அடைத்து வைத்து ஆயுதங்களைக் கொடுத்து மாவோயிஸ்டுகளுக்கும் அவர்களுக்கு எதிராக இருக்கும் உறவுகளான பழங்குடி மக்கள் மீதும் தாக்குதல் நடத்துவது என்பதுதான் சல்வா ஜூதுமின் வேலை. அதாவது அரசும் அரசியல் கட்சிகளும் மாவோயிஸ்டுகளுக்கு எதிராக உருவாக்கிய ஒரு ஆயுதக் குழுதான் சல்வா ஜூதும்.
சல்வா ஜூதும் என்ற இந்த ஆயுதக் குழுவின் அட்டகாசங்களால் சத்தீஸ்கரில் 644 பழங்குடி கிராமங்கள் காலி செய்யபட்டு சுமார் 3 லட்சம் மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். முன்னாள் நக்சலைட்டுகள் மற்றும் பழங்குடி இளைஞர்களை கட்டாயப்படுத்தி சல்வா ஜூதும் முகாம்களில் ஆயுதப் பயிற்சி அளித்து மாதம் ரூ1,500 முதல் ரூ3 ஆயிரம் வரை ஊதியமும் கொடுத்து ஆயுதங்களும் வழங்கியது அரசு.
கடந்த 2004ஆம் ஆண்டு முதல் 2010ஆம் ஆண்டு வரை சத்தீஸ்கர் மாநிலத்தில் மட்டும் 2298 தாக்குதல்களை மாவோயிஸ்டுகள் நடத்தி உள்ளனர். இதில் 538 போலீசார் உட்பட பாதுகாப்புப் படையினர் பலியாகி உள்ளனர். சல்வா ஜூதும் அமைப்பைச் சேர்ந்த 169 பேரும் 1064 பழங்குடி மக்களும் உயிரிழந்திருக்கின்றனர். சல்வா ஜூதும் அமைப்பின் மோசமான மனித உரிமை மீறல்கள் பற்றி பல்வேறு இயக்கங்கள் சுட்டிக்காட்டியிருந்தன.
டெல்லியைச் சேர்ந்த பேராசிரியர் நந்தினி சுந்தர் மற்றும் சூழல் ஆர்வலர் சர்மா ஆகியோர் 2007ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் சல்வா ஜூதும் அமைப்புக்கு எதிராக வழக்கு தொடர்ந்தனர். இதைத் தொடர்ந்து கடந்த 2011ம் ஆண்டு ஜூலை 5-ந் தேதியன்று சத்தீஸ்கர் மாநில அரசு சல்வா ஜூடுமை கலைத்துவிட வேண்டும் என்று உத்தரவிட்டது. அதன் பிறகுதான் சல்வா ஜூதும் கலைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications