ஸ்டெர்லைட் வழக்கில் தமிழ்நாடு மாசுகட்டுப்பாடு வாரியத்துக்கு நோட்டீஸ்
சென்னை: தூத்துக்குடி சிப்காட்டில் உள்ள 64 ஆலைகள் எந்தவிதமான வாயுவை வெளிப்படுத்த கூடியவை என்பது குறித்து விளக்கம் அளிக்க தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியத்துக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து விஷ வாயு வெளியேறியதால் அந்த பகுதி மக்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. இதையடுத்து, ஆலையை மூடக்கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதைத் தொடர்ந்து, ஸ்டெர்லைட் ஆலையை தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் இழுத்து மூடியது. தமிழக அரசின் இந்த நடவடிக்கையை எதிர்த்து பசுமை தீர்ப்பாயத்தில் ஸ்டெர்லைட் ஆலை வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கு டெல்லி பசுமை தீர்ப்பாயத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஸ்டெர்லைட் ஆலையின் குற்றச்சாட்டைத் தொடர்ந்து, தூத்துக்குடி சிப்காட் பகுதியில் உள்ள ஸ்டெர்லைட் தவிர்த்த, மற்ற 64 தொழிற்சாலைகளில் இருந்து என்னென்ன வாயுக்கள் வெளியாகின்றன, சுற்றுச்சூழலில் அவை ஏற்படுத்தும் தாக்கம் என்ன? என்பது குறித்து அறிக்கை அளிக்க தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு உத்தரவிடப்பட்டது.
மேலும், தூத்துக்குடி சிப்காட் ஆலையில் இருந்து வெளியேற்றப்படும் கந்தக ஆக்ஸைடு, குளோரின், அமோனியம் ஆகி்ய வாயுகள் கண் எரிச்சலுக்கு காரணமா என்பது குறித்தும் அறிக்கை தாக்கல் செய்ய ஆணை பிறப்பித்துள்ளது.
மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மறுப்பு
அடிக்கடி நிலைப்பாட்டை மாற்றிக் கொள்வதாக ஸ்டெர்லைட் எழுப்பிய குற்றச்சாட்டை தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மறுத்தது.
ஸ்டெர்லைட் ஆலையை தொடர்ந்து கண்காணித்து, அதன் அடிப்படையிலேயே நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும், சென்னையில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயம் அளித்த தீர்ப்பில், எதிர்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து எதுவும் குறிப்பிடவில்லை என்றும் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் விளக்கம் அளித்தது. தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தொடர்ந்து செவ்வாய்கிழமையன்றும் இந்த வழக்கு விசாரணை நடைபெற உள்ளது.












Click it and Unblock the Notifications