ஜி.கே.வாசனின் திடீர் விசிட்... டென்ஷனைக் குறைக்க 'ஹாட் வாட்டர்' குடித்த இளங்கோவன்!

அரவாக்குறிச்சியில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சதாசிவசம் சிலை திறப்பு விழா நடந்தது. இதில் கோஷ்டித் தலைவர்களான வாசனும், இளங்கோவனும் காரில் சென்றனர். உடன் ஏராளமான தொண்டர்களும் சென்றனர்.
கார் மாயனூர் சங்கு நகர் சென்றபோது திடீரென இந்த ஊரைச் சேர்ந்த சேவாதள மகிளா அமைப்பின் அமைப்பாளரான பார்வதியின் வீட்டுக்கு வண்டியை விடுப்பா என்று டிரைவரிடம் உத்தரவிட்டார். இதைக் கேட்டு பாதுகாப்புக்கு வந்த போலீஸார் குழம்பினர். மேலும் ஈவிகேஎஸ் இளங்கோவனும் குழம்பினார். ஏன் இந்த ஊருக்கு என்பதே அவர்களின் குழப்பம்.
இருப்பினும் யாரும் எதுவும் பேசவில்லை. கார், பார்வதி வீட்டுக்குப் போய் நின்றது. பார்வதி மிகவும் சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவர். அவரது மகன் பாபுவுக்குத் திருமணம் நடைபெறவுள்ளது. பாபு மாற்றுத் திறனாளி ஆவார். தனது வீட்டுக்கு திடீரென ஜி.கே.வாசன் வந்து நின்றதும் பார்வதிக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை. பாபுவும் மகிழ்ந்து போனார். உடனே ஆரத்தி எடுத்து வாசனை பார்வதி வரவேற்றார்.
வாசன், அவர்களுடன் உற்சாகமாகப் பேசினார். பார்வதி குடும்பத்தினரும், அக்கம் பக்கத்தினரும் வாசனிடம் மிகவும் பாசமாகப் பேசினர். இதையெல்லாம் பார்த்துக் கொண்டு நின்றிருந்தார் இளங்கோவன். பின்னர் என்ன நினைத்தாரோ, பார்வதி குடும்பத்தாரிடம் சூடா தண்ணி கொடுங்க என்று கேட்டு வாங்கி மடக் மடக்கென்று குடித்தார்.
பின்னர் பாபுவை வாழ்த்தி அவரது கையில் மொய்ப் பணமாக ரூ. 5000 கொடுத்து வாழ்த்தினார் வாசன். பின்னர் புகைப்படம் எடுத்துக் கொண்ட பின்னர் விடை பெற்றார்.
தேர்தல் வருதுல்ல.. அதனால இப்படித்தான் இனி அடிக்கடி நடக்கும்..!












Click it and Unblock the Notifications