அதிமுக மகளிரணி செயலாளராக தூத்துக்குடி மேயர் சசிகலா புஷ்பா நியமனம்: ஜெயலலிதா அறிவிப்பு
சென்னை: அதிமுக மகளிரணி செயலாளராக தூத்துக்குடி மேயர் சசிகலா புஷ்பா நியமிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து அதிமுக பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
அதிமுக மகளிர் அணி இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை துணைச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் எல்.சசிகலா புஷ்பா இன்று முதல் அப் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார்.
தூத்துக்குடி மாநகராட்சி மேயர் சசிகலா புஷ்பா அதிமுக மகளிர் அணிச் செயலாளர் பொறுப்பில் இன்று முதல் நியமிக்கப்படுகிறார். கழக உடன்பிறப்புகள் இவருக்கு முழு ஒத்துழைப்பு நல்கிடக் கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

நெல்லை, குமரி மாவட்டங்களுக்கு புதிய செயலாளர்கள்:
நெல்லை மற்றும் குமரி மாவட்டங்களுக்கு புதிய அதிமுக மாவட்டச் செயலாளர்களை முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
திருநெல்வேலி மாவட்டத்தில் அதிமுக அமைப்பு ரீதியாக, திருநெல்வேலி மாநகர், திருநெல்வேலி புறநகர் வடக்கு, திருநெல்வேலி புறநகர் தெற்கு என செயல்பட்டு வந்த மாவட்டக் கழக அமைப்புகள், இனி திருநெல்வேலி மாநகர் மாவட்டம் மற்றும் திருநெல்வேலி புறநகர் மாவட்டம் என இரண்டாகப் பிரிக்கப்படும்.
திருநெல்வேலி மாநகர் மாவட்டம்: இந்த மாவட்டத்தில் திருநெல்வேலி, பாளையங்கோட்டை, அம்பாசமுத்திரம், நாங்குநேரி மற்றும் ராதாபுரம் ஆகிய சட்டப் பேரவைத் தொகுதிகள் அடங்கும்.
திருநெல்வேலி புறநகர் மாவட்டம்: சங்கரன்கோவில் (தனி), வாசுதேவநல்லூர் (தனி), கடையநல்லூர், தென்காசி ஆகிய பேரவைத் தொகுதிகள் அடங்கும்.
மாநகர் மாவட்டச் செயலாளராக தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத் தலைவர் ஆர்.முருகையாபாண்டியனும், மாநகர் மாவட்ட ஜெ ஜெயலலிதா பேரவைச் செயலாளர் பொறுப்பில் சுதா கே.பரமசிவனும், புறநகர் மாவட்டக் கழகச் செயலாளராக கே.பி.குமார் பாண்டியனும் நியமிக்கப்படுகிறார்கள்.
திருநெல்வேலி மாநகர் மற்றும் புறநகர் ஆகிய மாவட்டங்களுக்கு கட்சி மற்றும் சார்பு அமைப்புகளின் நிர்வாகிகள் நியமனம் செய்யப்படும் வரை, இப்போதுள்ள நிர்வாகிகள் சம்பந்தப்பட்ட மாவட்டத்துக்கு உட்பட்ட நிர்வாகப் பொறுப்பில் தொடர்ந்து செயல்படுவார்கள்.
கன்னியாகுமரி மாவட்டம்: கன்னியாகுமரி மாவட்டம் என்று செயல்பட்டு வந்த கழக அமைப்பு, இனி கன்னியாகுமரி கிழக்கு மற்றும் கன்னியாகுமரி மேற்கு மாவட்டம் என இரண்டாகப் பிரிக்கப்படும்.
கன்னியாகுமரி கிழக்கு மாவட்டத்தில் கன்னியாகுமரி, நாகர்கோவில் மற்றும் குளச்சல் ஆகிய பேரவைத் தொகுதிகளும், கன்னியாகுமரி மேற்கு மாவட்டம் பத்மநாபபுரம், விளவங்கோடு, கிள்ளியூர் ஆகிய தொகுதிகளையும் அடங்கி இருக்கும்.
கன்னியாகுமரி கிழக்கு மாவட்டச் செயலாளர் பொறுப்பில் குருந்தன்கோடு ஒன்றியச் செயலாளர் ஏ.சிவசெல்வராஜனும், கன்னியாகுமரி மேற்கு மாவட்டச் செயலாளர் பொறுப்பில், டி.ஜான் சிங்கமும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கன்னியாகுமரி கிழக்கு மற்றும் மேற்கு ஆகிய மாவட்டங்களுக்கு கட்சி மற்றும் சார்பு அமைப்புகளின் நிர்வாகிகள் நியமனம் செய்யப்படும் வரை இப்போதுள்ள நிர்வாகிகள் சம்பந்தப்பட்ட மாவட்டத்துக்கு உட்பட்ட நிர்வாகப் பொறுப்பில் தொடர்ந்து செயல்படுவார்கள் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications