கேட்டாலே கண்ணுல தண்ணி வருது...: சாம்பார் வெங்காயம் கிலோ ரூ. 110
சென்னை: முன்பெல்லாம் வெங்காயத்தை தோல் உரித்தால் தான் கண்ணுல நீர் வரும். ஆனா இப்போ விலையைக் கேட்டாலே கண்ணில் ‘இரத்தக்கண்ணீர்' வருகிறது. ஆமாம், சாம்பார் வெங்காயம் கிலோ விலை ரூ110.
இதற்குக் காரணம் விளைந்த வெங்காயம் சந்தைக்கு வருவதற்கு முன்னதாக இடைத்தரகர்களால் பதுக்கி வைக்கப்படுவதுதான் என்ற குற்றச்சாட்டு கூறப்படுகிறது.
சில வாரங்களுக்கு முன்பு வரை சின்ன வெங்காயத்தின் விலை கிலோவுக்கு ரூ.45 தான். ஆனால் அதிரடியாக தற்போது சில்லறை விலைக் கடைகளில் ஒரு கிலோ ரூ.100 முதல் ரூ.110 வரை விற்கப்படுகிறது சின்ன வெங்காயம்.
வெங்காய வருகை...
பொதுவாக சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வெளிமாவட்டங்களான தாராபுரம், உடுமலை, பல்லடம், திருப்பூர், வத்தலகுண்டு, பெரம்பலூர் உள்ளிட்ட இடங்களிலிருந்து சின்ன வெங்காயம் வருகிறது.
தட்டுப்பாடு...
வழக்கமாக நாளொன்றுக்கு சுமார் 10 லாரிகளில் வரும் 1500 டன் சின்ன வெங்காயம் குறைந்து, கடந்த சில வாரங்களாக வெறும் 750 டன் மட்டுமே வருவதாக வியாபாரிகள் குறை கூறுகின்றனர்.
செயற்கைத் தட்டுப்பாடு...
இடைத்தரகர்களால் உண்டான செயற்கைத் தட்டுப்பாடே இந்த நிலைக்கு காரணம் என வெங்காய வியாபாரிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
குடோனில் பதுக்கல்...
இது குறித்து கோயம்பேடு வியாபாரி ஒருவர் கூறும்போது, ‘இந்த ஆண்டு மழை குறைந்ததால் வெங்காய விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் சந்தையில் சின்ன வெங்காயத்தின் விலை சற்று உயர்ந்தது. ஆனால், பெரம்பலுர், ஒட்டன்சத்திரம் மற்றும் அதை சுற்றியுள்ள இடங்களைச் சேர்ந்த சில இடைத்தரகர்கள் இதைப் பயன்படுத்திக் கொண்டு, விளைநிலங்களிலிருந்து பெறப்படும் வெங்காயத்தை அவர்களது குடோனில் பதுக்கி வைத்துள்ளனர்.
பல மடங்கு லாபம்...
இடைத்தரகர்கள் வெங்காயத்துக்கு செயற்கையாக தட்டுப்பாட்டை ஏற்படுத்தி வருவதால், அதன் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. சின்ன வெங்காயத்தை ஈரம் படாமல் வைத்தால் 2 மாதங்கள் வரை கெட்டுப் போகாது. விவசாயிகளிடம் குறைந்த விலைக்கு வெங்காயத்தை வாங்கி குடோனில் பதுக்கி வைத்துள்ளனர். இதன் மூலம் அவர்களுக்கு கிடைக்கும் லாபம் பல மடங்கு அதிகம்' எனத் தெரிவித்தார்.
காய்கறியும் காஸ்ட்லிதான்...
வெங்காய விலையைப் போலவே, விளைச்சல் மற்றும் வரத்து குறைந்த காரணத்தால் சில காய்கறிகளின் விலைகளும் உயர்ந்துள்ளன. அதிலும் குறிப்பாக தக்காளி, புடலங்காய், பாகற்காய், சேனைக்கிழங்கு உள்ளிட்ட காய்கறிகளின் விலை இரு மடங்காக உயர்ந்துள்ளது.