என் மகன் அப்பாவி, பணத்துக்கு ஆசைப்படாதவன்: ஸ்ரீசாந்த் தாய் கண்ணீர்
திருவனந்தபுரம்: தனது மகன் பணத்துக்கு ஆசைப்படாதவர் என்று ஐபிஎல் ஸ்பாட் பிக்ஸிங் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் ஸ்ரீசாந்தின் தாய் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் போட்டிகளில் ஸ்பாட் பிக்ஸிங் செய்தது தொடர்பாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்கள் ஸ்ரீசாந்த், அங்கீத் சவான் மற்றும் அஜீத் சாண்டிலா ஆகியோர் கடந்த மாதம் 16ம் தேதி கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் சவான் மட்டும் திருமணத்திற்காக ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.
இந்நிலையில் கேரள மாநிலம் கொச்சியில் வசித்து வரும் ஸ்ரீசாந்தின் பெற்றோர் சாந்த குமாரன் நாயர் மற்றும் தாய் சாவித்ரி ஆகியோர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர். அப்போது அவர்கள் தங்கள் மகன் நிரபராதி என்று தெரிவித்தனர்.
ஸ்ரீசாந்த்தின் தாய் சாவித்ரி கூறுகையில்,
ஸ்ரீசாந்த் கிரிக்கெட்டை உயிர் மூச்சாக நினைத்தார். அவர் விளையாடுகையில் மைதானத்தில் குறும்பு செய்வாரே தவிர மோசமான செயல்களில் ஈடுபட்டதில்லை. அவரது கைதுக்கு பின்னால் சதிச் செயல் உள்ளது. அவர் பணத்திற்கு ஆசைப்படாதவர். ஒரு வழக்குக்காகக் கூட அவர் காவல் நிலையம் சென்றிராதவர். இந்திய அணியில் உள்ள யாருக்காகவோ தான் அவர் இப்படி செய்துள்ளாரே தவிர தனக்காக செய்யவில்லை. ஸ்ரீசாந்துக்கு எதிராக யாரோ சதி செய்வதால் தான் அவருக்கு இதுவரை ஜாமீன் கிடைக்கவில்லை.
இந்த வழக்கில் போலீசார் பல உண்மைகளை மறைக்கின்றனர். இருப்பினும் நீதித் துறை மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. அதனால் அவருக்கு விரைவில் ஜாமீன் கிடைக்கும் என்று நம்புகிறோம் என்றார் கண்ணீர் மல்க.