மதுரையில் கருணாநிதி பிறந்த நாள்..ஸ்டாலின் பங்கேற்றதால் அழகிரி ஆப்சென்ட்
திமுக தலைவராக தமக்குப் பிறகு ஸ்டாலின் என்பதுதான் கருணாநிதியின் நிலைப்பாடு. ஆனால் இதற்கு மு.க. அழகிரி கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். அத்துடன் மதுரையில் மு.க. ஸ்டாலின் பங்கேற்கும் அனைத்து கட்சி நிகழ்ச்சிகளையும் அழகிரியும் அவரது ஆதரவாளர்களும் தொடர்ந்து புறக்கணித்து வருகின்றனர். இந்நிலையில் தமது பிறந்த நாளை முன்னிட்டு மு.க.அழகிரியையும், ஸ்டாலினையும் ஒரே மேடையில் நிறுத்தி சமரசம் செய்ய திமுக தலைவர் கருணாநிதி விரும்பினார். இதனாலேயே அழகிரியின் தீவிர ஆதரவாளரான மதுரை புறநகர் திமுக மாவட்டச் செயலர் பி.மூர்த்தி தலைமையில் மதுரையில் நேற்று கூட்டத்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டது. மதுரை அய்யர் பங்களாவில் நடைபெறும் இக் கூட்டத்தில் ஸ்டாலின், அழகிரி பங்கேற்பர் என விளம்பரப்படுத்தப்பட்டது.
இதற்காக மதுரை வந்த ஸ்டாலினை மு.க.அழகிரியின் முக்கிய ஆதரவாளர்களான மதுரை முன்னாள் மேயர் தேன்மொழி, துணை மேயர் பி.எம்.மன்னன் உள்ளிட்டோர் வரவேற்கவில்லை. பின்னர் அய்யர் பங்களாவில் நடந்த கூட்டத்துக்கு இரவு 7.45 மணிக்கு வந்தார். ஆனால் மு,க.அழகிரியோ, அவரது ஆதரவாளர்களோ கூட்டத்துக்கு வரவில்லை. கூட்டத்தில் தேர்தல் நிதியாக ரூ. 2.34 கோடி மு.க. ஸ்டாலினிடம் அளிக்கப்பட்டது. தமது திட்டப்படி ஸ்டாலினுடன் அழகிரி ஒரே மேடையில் பங்கேற்காமல் போனதால் திமுக தலைவர் கருணாநிதி அதிர்ச்சி அடைந்திருப்பதாகக் கூறப்படுகிறது.