நெல்லை: அதிமுக புறநகர் மாவட்ட செயலாளர் அதிரடி நீக்கம்... ஜெ. உத்தரவு
நெல்லை: நெல்லை புறநகர் மாவட்ட அதிமுக செயலாளர் குமார் பாண்டியன் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து அதிமுக பொது செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையில், திருநெல்வேலி புறநகர் மாவட்ட அதிமுக செயலாளர் குமார் பாண்டியன் அந்த பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார். இபபொறுப்புக்கு ஒருவர் நியமிக்கப்படும் வரை செயலாளர் முருகையா பாண்டியன் பொறுப்பு வகிப்பார். இவருக்கு கட்சியினர் முழு ஓத்துழைப்பு அளிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.
நெல்லை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளராக அமைச்சர் செந்தூர் பாண்டியன் செயல்பட்டு வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு செந்தூர் பாண்டியன் மாற்றப்பட்டு புறநகர் வடக்கு மாவட்ட செயலாளராக குமார் பாண்டியன் நியமனம் செய்யப்பட்டார். இந்நிலையில் நெல்லை மாவட்ட அதிமுகவில் கடந்த வாரம் அதிரடி மாற்றம் மேற்கொள்ளப்பட்டது. நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் சுதா பரமசிவன் நீக்கப்பட்டார். மாநகர் மாவட்டமும், புறநகர் தெற்கு மாவட்டமும் ஒருங்கிணைக்கப்பட்டு நெல்லை மாநகர் மாவட்ட செயலாளராக முருகையா பாண்டியன் நியமிக்கப்பட்டார்.
அப்போதும் வடக்கு மாவட்ட செயலாளராக குமார் பாண்டியன் இருந்து வந்தார். இந்த மாற்றம் நிகழ்ந்த சில நாட்களில் குமார் பாண்டியனிடமிருந்து புறநகர் வடக்கு மாவட்ட மாவட்ட அதிமுக செயலாளர் பதவி பறிக்கப்பட்டது.
ஜெயலலிதாவின் அறிவிப்பினை அடுத்து நெல்லை மாவட்ட அதிமுகவில் 3 மாவட்ட செயலாளர்கள் இருந்த நிலை மாறி மாவட்டம் முழுவதும் நெல்லை மாநகர், புறநகர் வடக்கு, புறநகர் தெற்கு என அனைத்தும் ஒரே மாவட்ட செயலாளரின் கீழ் வந்துள்ளது.
சங்கரன்கோவில் ஒன்றிய செயலாளர் நீக்கம்
சங்கரன்கோவில் அதிமுகவினரிடையே ஏற்பட்ட மோதலை அடுத்து கட்சிக்கு எதிராக செயல்பட்டதாக மேலநீலிதநல்லூர் யூனியன் சேர்மன் முருகையா ஒன்றிய அதிமுக செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
சங்கரன்கோவில் பயணியர் விடுதியில் மே 27ம் தேதி மாவட்ட செயலாளர் குமார் பாண்டியன் இருந்த போது அதிமுகவினர் முத்து செல்வி ஆதரவாளர்களுக்கும், மேலநீலிதநல்லூர் யூனியன் சேர்மன முருகையா ஆதாரவளார்களுக்கும் இடையே மோதல் வெடிததது.
இதில் முத்துசெல்வி எம்எல்ஏ தரப்பை சேர்ந்த மேலநீலிதநல்லூர் ஒன்றிய எம்ஜிஆர் மன்ற துணை செயலாளர் மதுரம் மற்றும் ஒன்றிய அதிமுக செயலாளரும், யூனியன் சேர்மனுமான முருகையா ஆதரவாளரான குருக்கள்பட்டி முன்னாள் கிளை செயலாளர் சண்முகையா ஆகியோர் படுகாயம் அடைந்தனர். மேலும் முருகையா தரப்பினர் முத்துசெல்வி எம்எல்ஏவை தரக்குறைவாக பேசியதுடன் அவரை தாக்கவும் முயன்றதால் அதிமுகவுக்கள் சலசலப்பு ஏற்பட்டது. இதுகுறித்து சங்கரன்கோவில் டவுன் போலீசில் முத்துசெல்வி எம்எல்ஏ, மதுரம், சண்முகையா ஆகியோர் தனிதனியாக புகார் அளித்தனர்.
இதனை தொடர்ந்து சங்கரன்கோவிலில் மோதலில் ஈடுபட்ட அதிமுக சட்டமன்ற உறுப்பினர் மற்றும் கட்சி நிர்வாகிகளை மே 29ம் தேதி சென்னைக்கு வருமாறு கட்சி மேலிடம் அழைத்தது. தொடர்ந்து 30ம் தேதி 5 அமைச்சர்கள் கொண்ட குழு இவர்களிடம் விசாரணை நடத்தியது. இதற்கிடையே கீழநிலிதநல்லூர் தொடக்க கூட்டுறவு வஙகி தேர்தலிலும் சொந்த கட்சியினரை தோற்கடித்து மதிமுகவினரை வெற்றி பெற செய்த மேலநீலிதநல்லுர் ஒன்றிய அதிமுக செயலாளரும், யூனியன் சேர்மனான முருகையா செயல்பட்டதாகவும், அவரை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் அதிமுகவினர் கண்டன போஸ்டர் ஓட்டியிருந்தனர். இந்நிலையில் மேலநீலிதநல்லுர் ஒன்றிய அதிமுக செயலாளர் பொறுப்பிலிருந்து முருகையாவை நீக்கி அதிமுக பொது செயலாளர் ஜெயலலிதா உத்தரவிட்டார். இது கட்சி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.