ராஜ்யசபா வேட்பாளர் யார்? பெரும் குழப்பத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி!
சென்னை: தமிழகத்தில் ராஜ்யசபா வேட்பாளராக யாரை நிறுத்துவது என்பதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்குள் பெரும் குழப்பம் தொடர்ந்தும் நீடித்து வருகிறது.
தமிழகத்தைச் சேர்ந்த 6 ராஜ்யசபா உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் வரும் 27-ந் தேதி நடைபெற இருக்கிறது. 151 எம்.எல்.ஏக்களை கைவசம் வைத்திருக்கும் அ.தி.மு.க. 4 ராஜ்யசபா வேட்பாளர்களை நிறுத்தலாம். ஒரு எம்.பியை தேர்வு செய்ய 34 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தேவை. இதனடிப்படையில் எஞ்சியுள்ள எம்.எல்.ஏக்கள் வாக்குகளை இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு அதிமுக அளிக்கும் என்று தெரிகிறது. ஆனால் அதிமுக ஆதரவுடன் நிறுத்தப்படக் கூடிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் யார் என்பதை அக்கட்சி முடிவு செய்ய முடியாமல் தவித்து வருகிறது.
கடந்த வாரம் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழுக் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் செயலாளர் தா. பாண்டியன், முதல்வர் ஜெயலலிதா சார்பில் அமைச்சர்கள் ஓ. பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் தம்மை சந்தித்ததாகவும் தம்மையே ராஜ்யசபா தேர்தலில் வேட்பாளராக நிறுத்த ஜெயலலிதா விரும்புவதாகவும் கூறியிருக்கிறார்.
ஆனால் தங்களது கட்சியின் ராஜ்யசபா வேட்பாளர் யார் என்பதை இன்னொரு கட்சியின் தலைமை எப்படி தீர்மானிக்கலாம் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் தா. பாண்டியனுக்கு அந்த கூட்டத்திலேயே கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர். தா.பாண்டியனைத் தவிர பெரும்பாலானோர் டி. ராஜாவே எம்.பி.யாக மீண்டும் தொடர வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
இதனிடையே தங்களுக்கு ஆதரவு தரக் கோரி முதல்வர் ஜெயலலிதாவை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களான பரதனும் சுதாகர் ரெட்டியும் சந்திக்கக் காத்திருக்கின்றனர். இதற்கான அப்பாயிண்ட்மெண்ட்டை வாங்கித் தராமல் தா.பாண்டியன் இழுத்தடிக்கிறார் என்றும் அவர் மீது புகார் வாசிக்கிறது அக்கட்சி வட்டாரங்கள். தா. பாண்டியனைப் பொறுத்தவரையில் போராடியாவது எம்.பி.யாகிவிடுவது என்ற முடிவில் இருப்பதாக தெரிகிறது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைத் தாக்கியிருக்கும் 'ராஜ்யசபா' தேர்தல் புயல் ஓரிரு நாட்களில் கரையைக் கடக்கும்.. அப்போதுதான் தா.பாண்டியன் 'வேட்பாளராக' கரை சேர்வாரா என்பது தெரியவரும்..