கச்சத்தீவு ஒப்பந்தத்தை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்: பிரதமருக்கு விஜயகாந்த் கடிதம்
சென்னை: கச்சத்தீவு ஒப்பந்தத்தை மத்திய அரசு மறுபரிசீலனை செய்யக் கோரி தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இது குறித்து அவர் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது,
கடலில் மீன்பிடிக்க செல்லும் அப்பாவி தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தினமும் தாக்கப்பட்டு துயரத்துக்கு ஆளாகி வருகின்றனர் என்பதை தங்கள் கவனத்துக்கு கொண்டு வருகிறேன். இதனால் அவர்களது உயிருக்கு ஆபத்தான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பாக் ஜலசந்தியை கடக்கக் கூடாது என மிரட்டப்படுகின்றனர்.
எனவே அவர்கள் தங்கள் வாழ்வாதாரத்துக்காக இந்திய குடியுரிமையை ஒப்படைத்து விட்டு இலங்கை குடிமகனாகி அங்கு தங்க விரும்புகின்றனர். இந்த இக்கட்டான சூழ்நிலையில் நமது மீனவர்கள் பிரச்சினை குறித்து இலங்கை அரசுடன் பேசி விரைவில் உடன்பாட்டுக்கு வர வேண்டும். தேவைப்பட்டால் 1974-ம் ஆண்டு ஒப்பந்தத்தை மீண்டும் பரிசீலனை செய்ய வேண்டும்.
1951-ம் ஆண்டு இந்தியாவுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை நேபாளம் மறுபரிசீலனை செய்ய விரும்புகிறது. அதே வேளையில் 1987-ம் ஆண்டு ஏற்பட்ட இந்திய-இலங்கை ஒப்பந்தம் மதிக்கப்படவில்லை.
இதுவரை இலங்கை அரசு அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சமீபத்தில் இந்தியா வந்த சீன பிரதமர் எல்லை பிரச்சினையை இருதரப்பினரும் பேச்சுவார்த்தை மூலம் பேசி தீர்த்து கொள்ள சம்மதம் தெரிவித்துள்ளார்.
எனவே இலங்கை கடற்படையினரிடம் இருந்து தமிழக மீனவர்களை காக்க 1974-ம் ஆண்டு இந்திய-இலங்கை அரசால் போடப்பட்ட கச்சத்தீவு ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.