தமிழகத்தில் ராஜ்யசபா தேர்தல்... இதுவரை நடைபெற்ற வாக்குப் பதிவுகள்..
சென்னை: ராஜ்யசபா தேர்தலில் தமிழகத்தில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது தேர்தல் நடைபெறுகிறது. இதற்கு முன்பு நடைபெற்ற தேர்தல்களைப் பற்றிய ஒரு பார்வை..
ராஜ்யசபா தேர்தல்களைப் பொறுத்தவரை வாக்குப் பதிவு என்பது அரிதாக நடைபெறக் கூடிய ஒன்று. ஒரு எம்.பி.யை தேர்வு செய்ய 34ர் எம்.எல்.ஏக்கள் தேவை என்ற அடிப்படையில் ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் இருக்கும் இடத்தை புரிந்துணர்வு அடிப்படையில் பகிர்ந்து கொள்ளும் போது வாக்குப் பதிவுக்கு இடம் இல்லாமல் போய்விடுகிறது.
ஆனால் ஆளும் கட்சி மட்டுமின்றி எதிர்க்கட்சிகளுக்கும் போதுமான பலம் இருந்தும் ஒருங்கிணைப்பு இல்லாத நிலையில் ஒரு இடத்துக்கு இருவர் போட்டியிடும் போது வாக்குப் பதிவு தவிர்க்க முடியாத ஒன்றாகிவிடுகிறது. தமிழகத்தில் தற்போதைய ராஜ்யசபா தேர்தலில 6 இடங்களுக்கு 7 பேர் போட்டியிடுவதால் வாக்குப் பதிவு நடைபெற வேண்டிய ஒரு நிலை உருவாகி உள்ளது.
தமிழகத்தில் இதற்கு முன்பு ராஜ்யசபா தேர்தலில் எப்போதெல்லாம் வாக்குப் பதிவு நடைபெற்றது?
1983ல் பி.ராமமூர்த்தி VS ஜி.கே. மூப்பனார்
1983-ம் ஆண்டு ஜூலையில் நடைபெற்ற ராஜ்யசபா தேர்தலில் வாக்குப் பதிவு நடைபெற்றது. அ.தி.மு.க.வின் ஆலடி அருணா, ஜி.வரதராஜூ, எஸ்.காதர்ஷா, இரா.சாம்பசிவம் ஆகிய 4 பேர் வெற்றி பெற்றனர். தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஜி.கே.மூப்பனார், தி.மு.க.வைச் சேர்ந்த முரசொலி மாறன் ஆகியோரும் வெற்றி பெற்றனர். இத்தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் பி.ராமமூர்த்தி, ஜி.கே.மூப்பனாரை எதிர்த்துப் போட்டியிட்டதால் வாக்குப் பதிவு நடைபெற்றது. ஆனால் பி. ராமமூர்த்தி வெற்றி பெறவில்லை.
1984-ல் ஆற்காடு வீராசாமி தோல்வி
1984-ம் ஆண்டு மார்ச் மாதம் நடந்த ராஜ்யசபா தேர்தலில் வாக்குப் பதிவு நடைபெற்றது. அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட ஜெயலலிதா, வலம்புரிஜான், ராஜாங்கம், வக்கீல் ராமநாதன், காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட தங்கபாலு, தி.மு.க. சார்பில் போட்டியிட்ட வைகோ ஆகியோர் வெற்றி பெற்றனர். ஆனால் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட மற்றொரு வேட்பாளரான ஆற்காடு வீராசாமி தோல்வி அடைந்தார்.
1996-ல் பீட்டர் அல்போன்ஸ் VS வாழப்பாடி அணி
1996ஆம் ஆண்டு இதேபோல் 6 எம்.பிக்களை தேர்வு செய்ய 7 பேர் போட்டியிடனர். அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட 5 பேர் வெற்றி பெற்றனர். காங்கிரஸ் சார்பில் பீட்டர் அல்போன்ஸும் அவரை எதிர்த்து காங்கிரஸ் அதிருப்தி அணியான வாழப்பாடி ராமமூர்த்தி அணியின் உதயபானும் போட்டியிட்டனர். ஆனால் பீட்டர் அல்போன்ஸ் வெற்றி பெற்றார்.
தற்போது 17 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ராஜ்யசபா தேர்தலுக்கு வாக்குப் பதிவு நடைபெறுகிறது.