நீதிமன்ற தடையை மீறி என்.எல்.சி. ஊழியர்கள் வேலை நிறுத்தம் தொடருகிறது!
சென்னை: சென்னை உயர்நீதிமன்றத் தடையை மீறி என்.எல். சி. ஊழியர்கள் நேற்று இரவு முதல் வேலை நிறுத்தத்தை தொடர்ந்து வருகின்றனர். இதனால் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு தென்னிந்தியா முழுவதும் இருளில் மூழ்கும் அபாயம் உருவாகியுள்ளது.
என்.எல்.சி. நிறுவனத்தின் 5% பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்யும் மத்திய அரசின் முடிவுக்கு அனைத்து தொழிற்சங்கங்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மேலும் நேற்று இரவு முதல் வேலை நிறுத்தப் போராட்டம் தொடங்கும் என்றும் அறிவித்தனர். ஆனால் என்.எல்.சி. நிர்வாகமோ இந்த போராட்டத்துக்கு தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தது. இம்மனுவை ஏற்ற சென்னை உயர்நீதிமன்றம் என்.எல்.சி. ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு இடைக்கால தடை விதித்தது.
ஆனால் இத்தடையை மீறி அறிவித்தபடி நேற்று இரவு 10 மணி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த பேராட்டங்களை என்.எல்.சி. ஊழியர்கள் தொடங்கினர். இன்றும் 2வது நாளாக இந்தப் போராட்டம் தொடர்ந்து நடைபெறுகிறது. இதனால் என்.எல்.சி.யில் மின் உற்பத்தி பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. மின் உற்பத்தி பாதிக்கப்பட்டால் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, ஆந்திரா மற்றும் புதுச்சேரி என தென்னிந்தியாவே இருளில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.