அம்மா முடிவுப்படி வாழ்வேன்.. 'காதல்' இளவரசன் வேண்டாம்.. தர்மபுரி திவ்யா
சென்னை: பாமகவின் தலையீடு எப்போது புகுந்ததோ அன்று முதலே தனது காதல் திருமணம் தொடர்பாக தொடர்ந்து குழப்பமாகவே பேசி வந்த தர்மபுரி இளம் பெண் திவ்யா, தற்போது தான் காதலித்து, ஊரை விட்டு ஓடி திருமணம் செய்து வாழ்ந்து வந்த கணவர் இளவரசனுடன் இனிமேல் வாழ மாட்டேன். எனது தாயாரின் விருப்பப்படியே வாழ்வேன் என்று அறிவித்துள்ளார்.
தர்மபுரி மாவட்டம், மாரவாடியைச்சேர்ந்தவர் தேன்மொழி. இவரது மகள்தான் திவ்யா.இவரு்ம், இளவரசனும் காதலித்துத் திருமணம் செய்து கொண்டனர். ஊரை விட்டும் ஓடினர். இதுகுறித்து போலீஸில் திவ்யாவின் தந்தை புகார் கொடுத்தார். இந்த நிலையில் அவர் தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து தலித் மக்களுக்கு எதிராக பெரும் வன்முறை வெடித்தது.
3 கிராமங்களை வன்னிய சமுதாயத்தினர் சூறையாடி பெரும் வன்முறையில் ஈடுபட்டனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தேன்மொழி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு ஹேபியஸ் கார்பஸ் மனு தாக்கல் செயய்பட்டது. அதில், தனது மகளை இளவரசன் கடத்திக் கொண்டு போய் திருமணம் செய்து விட்டதாகவும், இப்போது திவ்யா என்னைத் தொடர்பு கொண்டு இளவரசன் தன்னை மிரட்டுவதாகவம், அச்சுறுத்துவதாகவும் தெரிவித்தார். எனவே எனது மகளை மீட்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
ஸ்திரமற்ற பேச்சு
இதையடுத்து மார்ச்27ம் தேதி உயர்நீதிமன்றத்தில் திவ்யா ஆஜரானார். அப்போது நானாக விரும்பித்தான் சென்றேன். என்னை யாரும் துன்புறுத்தவில்லை என்று அவர் கூறினார். பின்னர் மீ்ண்டும் விசாரணைக்கு வழக்கு வந்தபோது பாமகவைச் சேர்ந்த வக்கீல் பாலு உள்ளிட்டோர் புடை சூழ கோர்ட்டுக்கு வந்தார் திவ்யா. அவரது பேச்சில் மாற்றம் ஏற்பட்டது. நீதிபதிகளிடம், சமீபத்தில் நடந்த சம்பவங்களால் எனது மனம் மிகவும் குழம்பிப்போய் உள்ளது. எனவே, தகுந்த முடிவு எடுப்பதற்கு முன்பு எனது தாயாருடன் தங்க விரும்புகிறேன். இளவரசனுடன் இப்போது பேச விரும்பவில்லை என்று தெரிவித்தார்.
நேற்று புதுப் பேச்சு
பின்னர் ஜூலை 1ம் தேதி வழக்கு மீண்டும்விசாரணைக்கு வந்தது. அப்போது எனது தாயார் என் காதல் திருமணத்தை அங்கீகரித்தால், இளவரசனுடன் சேர்ந்து வாழ்வேன் என்று கூறினார் திவ்யா. இதையடுத்து நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது திவ்யாவின் நிலையில் மேலும் மாற்றம் காணப்பட்டது. மேலும், தேன்மொழி தரப்பில் ஆஜரான வக்கீல் ரூபர்ட் பர்ணபாஸ், கே.பாலு ஆகியோர் வழக்கை வாபஸ் பெறுவதாக நீதிபதிகளிடம் தெரிவித்தனர். இதுகுறித்த தீர்ப்பை நாளை வழங்குவதாக நீதிபதிகள் அறிவித்தனர். பின்னர் வெளியே வந்த திவ்யா பரபரப்பாக பேசினார்..
விரும்பித்தான் மணந்தேன்
இளவரசனை விரும்பித்தான் திருமணம் செய்தேன். அதன் பின்னர் அப்பா இறந்துவிட்டார். ஊரிலும் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டன. அதனால் அந்த கஷ்டங்களும், அப்பாவின் இழப்பு மட்டும்தான் என் நினைவில் இருந்தன.
சேர்ந்து வாழ முடியவில்லை
அதனால் அவருடன் சேர்ந்து வாழ முடியவில்லை. வேறு எந்த ஆசையும், எண்ணமும் அவர் மீது தோன்றவில்லை.
அப்பாவின் நினைவு மட்டுமே
எனக்கு அப்பாவின் நினைவு மட்டும்தான் உள்ளது. அன்றிருந்த சூழ்நிலையில் என்னால் அங்கிருந்து மீறி உடனே வர முடியவில்லை. எனவேதான் இவ்வளவு நாட்களை நான் எடுத்துக்கொண்டேன். இப்போது நான் வந்துவிட்டேன்.
அப்பா இடத்தில் இனி நான் இருப்பேன்
இளவரசன் வேண்டாம் என்று அப்பா கூறியிருந்த நிலையில், இனிமேல் எந்த சூழ்நிலையிலும் அவருடன் சேர்ந்து வாழ தயாராக இல்லை. அம்மாவுடன் இருந்து எனது அப்பாவின் இடத்தை என்னால் முடிந்தவரை ஈடு செய்வேன். அம்மாவும் வேண்டும், அவரும் வேண்டும் என்றுதான் ஆரம்பத்தில் இருந்தேன்.
சேர்ந்து வாழத் தயாராக இல்லை
ஆனால் எனது தந்தையின் நினைவு தொடர்ந்து இருப்பதால், இளவரசனுடன் சேர்ந்து வாழும் சூழ்நிலையே எனக்கு இல்லை. நான் எப்போது என்றாலும் சேர்ந்து வாழ தயாராக இல்லை. அம்மாவின் முடிவுப்படி வாழ தயாராகிவிட்டேன்.
இளவரசனுடன் வாழ்வேன் எனக் கூறவில்லை
ஆனால், இளவசரனுடன் வாழத்தயார் என்று நீதிபதிகளிடம் நான் கூறியதாக எதிர்த்தரப்பினர் தவறான தகவலை வெளியிட்டுவிட்டனர். நான் எனது தாயார், உறவினர்களின் ஆதரவை பெறுவதற்காக, நான் செய்தது தவறு என்று கூறியிருந்த நிலையில், இப்படி ஒரு தவறான தகவலை கொடுத்துவிட்டனர். இதனால் நான் தனிமைப்படுத்தப்பட்டு விட்டேன் என்றார் திவ்யா.
திவ்யாவின் இந்தப் புதுப் பேச்சால் இளவரசன் தரப்பு பெரும் வருத்தமடைந்துள்ளது.