வக்கீல்கள் போராட்டம்: சங்கரராமன் கொலை வழக்கு ஒத்திவைப்பு
புதுச்சேரி: புதுச்சேரி வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதால் சங்கரராமன் கொலை வழக்கு விசாரணையை தலைமை நீதிபதி முருகன் வரும் 26ம் தேதிக்கு ஒத்தி வைத்திருக்கிறார்.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் மேலாளர் சங்கராமனின் கொலை வழக்கு விசாரணை புதுச்சேரி மாநில முதன்மை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இருதரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் இவ்வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் அனைத்தும் விசாரிக்கப்பட்டு தற்போது தீர்ப்பை நோக்கி இறுதி கட்டத்தில் உள்ளது.
கடந்த மாதம் இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது நீதிபதி முருகன் விடுமுறையில் இருந்ததால் வழக்கு 5ஆம் தேதி ஒத்தி வைக்கப்பட்டிருந்தது.
இன்று காலையில் தலைமை நீதிபதி முருகன் முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு வந்தது. மொத்தம் 23 பேரில், விஜயேந்திரர், சுந்தரேச அய்யர் மற்றும் ரகு உட்பட 17 பேர் மட்டுமே நீதிமன்றத்தில் ஆஜராகினர். முக்கிய குற்றவாளியான ஜெயந்திரர் ஆஜராகவில்லை.
குன்னூர் விரைவு நீதிமன்ற நீதிபதி தங்கராஜ் கைதை கண்டித்தும், மேலும் சில கோரிக்கைகளை வலியுறுத்தியும் இரண்டாவது நாளாக தொடரும் வழக்கறிஞர்களின் நீதிமன்ற புறகணிப்பு போராட்டத்தால் பணிகள் அனைத்தும் முடங்கி போயுள்ளன. இந்த நிலையில், நீதிபதி முருகன் இந்த வழக்கினை வரும் ஜூலை 26ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.