தவறுதலாகக் கொட்டிய பெட்ரோல்...: 11 வயது சிறுவனுக்கு 1.5 கோடி அபராதம் விதித்த ரியாத் கோர்ட்
ரியாத்: விளையாடும் போது தவறுதலாக நண்பனின் மீது பெட்ரோல் கொட்டிய 11 வயது சிறுவனுக்கு கொலை முயற்சி என கூறி சுமார் ஒன்றரை கோடி அபராதம் விதித்து தீர்ப்பளித்தார் ரியாத் நீதிபதி.
சவுதி அரேபியாவை சேர்ந்த முகம்மது பயாஸ் என்ற சிறுவன் தனது நண்பனோடு சேர்ந்து கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் தங்கள் வீட்டின் அருகே உள்ள திறந்த வெளியில் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது அவர்கள் வீட்டிலிருந்து எடுத்து வந்த உருளைக்கிழங்கை பெட்ரோல் உதவியால் சமைத்துக் கொண்டிருந்தனர்.
அடுப்பை நன்றாக எரிய வைப்பதற்காக, அடுப்பில் சிறிதளவு பெட்ரோலை ஊற்றினான் முகம்மது. ஆனால், கைத்தவறுதலாக சிறிது பெட்ரோல் அருகில் அமர்ந்திருந்த அவனது நண்பனின் மீது பட்டு விட்டது. அவன் அடுப்பின் மிக அருகாமையில் அமர்ந்திருந்த படியால், நெருப்பு அவன் உடலில் பற்றியது.
இதில் சிறிது தீக்காயம் அடைந்த அச்சிறுவன், சில நாட்கள் மருத்துவச்சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பி விட்ட போதிலும், அச்சிறுவனின் தாயார் முகம்மது மீது போலீசில் கொலை வழக்கு பதிவு செய்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதி, பயாஸ் முகம்மதுவுக்கு இந்திய மதிப்புக்கு சுமார் ஒரு கோடியே 44 லட்சத்து 55 ஆயிரத்து 909 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளார். இது அநியாயம் என்று கூறிய முகம்மதுவின் தந்தை இத்தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ய இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications