தேவர் ஜெயந்தி வன்முறை: தே.பா சட்டத்தில் இருந்து விடுதலையானவர்கள் மீண்டும் கைது
மதுரை: தேவர் ஜெயந்தி வன்முறை வழக்கில் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைதான 7 பேர் நேற்று விடுதலையான நிலையில் அவர்களை மதுரை போலீசார் மீண்டும் கைது செய்துள்ளனர்.
கடந்த ஆண்டு அக்டோபர் 30ம் தேதி பசும்பொன்னில் நடைபெற்ற தேவர் குருபூஜைக்கு சென்றுவிட்டு திரும்பிக் கொண்டிருந்தவர்கள் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதில் 7 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய 7 பேரை கைது செய்த போலீசார் தேசிய பாதுக்காப்பு சட்டத்தில் சேலம் சிறையில் அடைத்தனர்.
தேசிய பாதுகாப்பு சட்டத்தில் தங்களை கைது செய்ததை ரத்து செய்யக் கோரி குற்றவாளிகள் 7 பேரும் வழக்கு தொடுத்தனர். இதனையடுத்து அவர்கள் மீதான தே.பா சட்டத்தை ரத்து செய்யக் கோரி நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து சேலம் சிறையில் இருந்த 7 பேரும் ஜாமீனில் விடுதலையானவர்கள்.
அவர்கள் அனைவரும் கடந்த ஆண்டு அக்டோபர் 30ம் தேதியில் பெருங்குடியில் பேருந்துகள் மீது தாக்குதல் நடத்திய வழக்கில் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளனர். மதுரை பெருங்குடி போலீசார் அவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.