கருக்கலைப்பு மசோதாவுக்கு ஒரு வழியாக ஒப்புதல் அளித்த அயர்லாந்து
கடந்த ஆண்டு அயர்லாந்தில் இந்திய பல் மருத்துவரான சவிதா மரணம் அடைந்தார். சவிதாவின் கருவை கலைத்தால் தான் அவரை காப்பாற்ற முடியும் என்ற நிலை இருந்தும் அவருக்கு கருக்கலைப்பு செய்ய மருத்துவர்கள் மறுத்ததால் அவர் கடந்த அக்டோபர் மாதம் மரணம் அடைந்தார். கத்தோலிக்க நாடான அயர்லாந்தில் கருக்கலைப்பு செய்ய அனுமதி இல்லை.
இந்நிலையில் சவிதாவின் மரணத்தை அடுத்து கருக்கலைப்பு செய்ய அனுமதி கோரி மக்கள் போராடத்தில் குதித்தனர். இதையடுத்து கருக்கலைப்பை அனுமதிக்கும் மசோதா அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நேற்று அறிமுகப்படுத்தப்பட்டது. வாக்கெடுப்பில் 127 பேர் அதற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.
ஆனால் குறிப்பிட்ட சில சூழலில் மட்டும் கருக்கலைப்பு செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதாவது கருக்கலைப்பு செய்தால் தான் தாயின் உயிரை காப்பாற்ற முடியும் என்ற சூழலில் அதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அயர்லாந்தில் கருக்கலைப்பு செய்ய முடியாததால் அந்நாட்டு பெண்கள் 4,000 பேர் கடந்த ஆண்டு இங்கிலாந்துக்கு சென்று கருவை கலைத்துள்ளனர் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கருவை கலைத்தவர்களில் 124 பேர் 18 வயதுக்குட்பட்டவர்கள்.