வாழப்பாடி அருகே கிணற்றில் தூர்வாரிய 3 தொழிலாளர்கள் கயிறு அறுந்து பலி
சேலம்: வாழப்பாடி அருகே கிணற்றில் தூர்வாரும் போது கயிறு அறுந்து விழுந்து 3 தொழிலாளர்கள் பலியானார்கள்.
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள மலையாளப்பட்டியைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவரது தோட்டத்தில் உள்ள கிணற்றில் தண்ணீர் வற்றி போய்விட்டது. இதனால் கிணற்றை தூர்வாரி ஆழப்படுத்தும் பணி கடந்த 20 நாட்களாக நடைபெற்று வருகிறது.
முதலில் கிணற்றில் உள்ள பாறை வெடிவைத்து தகர்க்கப்படும். பின்பு வெடி வைத்து தகற்கப்பட்ட கற்களை மின்சாரத்தில் இயங்கும் ரோப் கருவி கூடை மூலம் வெளியே அள்ளி போடப்படும். இந்த பணியில் நாமக்கல் மாவட்டம் புதுப்பட்டியைச் சேர்ந்த பாலமுருகன் (31), குருசாமிபாளையச் சேர்ந்த சுப்பிரமணி (40), குள்ளனாயக்கன்பட்டியைச் சேர்ந்த துரை(30) உள்ளிட்ட 7 பேர் ஈடுபட்டிருந்தனர். பாலமுருகன், சுப்பிரமணி, துரை ஆகியோர் ரோப் கருவியில் உள்ள கூடையில் அமர்ந்து கிணற்றில் இறங்கினர்.
அப்போது திடீரென ரோப் அறுந்து விழுந்ததில் 3 பேர் கூடையுடன் கிணற்றில் விழுந்தனர். அப்போது அங்குள்ள பாறைகளில் மோதி 3 பேரும் படுகாயம் அடைந்து பரிதாபமாக பலியானார்கள்.
இதை பார்த்த மற்ற தொழிலாளர்கள் அதிர்ச்சி அடைந்து கூச்சல் போடவே அக்கம், பக்கத்தில் இருந்தவர் ஓடிவந்து அவர்களை மீட்க முயன்றனர். ஆனால் முடியவில்லை. இதனையடுத்து கிணற்றின் உரிமையாளர் வெங்கடேசனுக்கும், வாழப்பாடி போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர்.
வாழப்பாடி போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.