அசாமில் தனி மாநிலம் கோரி தொடரும் வன்முறை!
குவஹாத்தி: அசாமை பிரித்து கர்பி அங்லாங் தனி மாநிலத்தை உருவாக்கக் கோரி அரசு அலுவலகங்களை சூறையாடும் சம்பவங்கள் தொடர்ந்தும் நடைபெற்று வருகிறது.
தெலுங்கானா உருவாக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது போதும்.. எங்கெங்கும் தனி மாநில கோஷம்.. மேற்கு வங்கத்தில் கூர்க்காலாந்து, அசாமில் கர்பி அங்லாங், போடோலாந்து, கதாம்பூர் மாநிலங்களை உருவாக்கக் கோரி போராட்டங்கள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
கர்பி அங்லாங் பகுதியில் அனைத்து அரசு அலுவலகங்களையும் குறி வைத்து போராட்டக்காரர்கள் தாக்கி வருகின்றனர். ரயில்வே இருப்புப் பாதையில் இருக்கும் கட்டைகளையும் அகற்றி ரயில் போக்குவரத்தை முடக்கி வைத்துள்ளனர். இதைத் தொடர்ந்து அங்கு காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும் அங்கு ராணுவம் குவிக்கப்பட்டு கொடி அணிவகுப்பும் நடத்தப்பட்டது. இதனிடையே கர்பி அங்லாங் பகுதியில் அமைதியை உருவாக்க அமைச்சர்கள் குழு ஒன்று அங்கு விரைந்துள்ளது.