பூங்கொத்து, சால்வைக்கு பதில் நல்ல புத்தகங்களை வழங்குங்கள்: நீதியரசர் சதாசிவம்
ஈரோட்டில் மக்கள் சிந்தனை பேரவை சார்பில் புத்தக திருவிழா நேற்று மாலை துவங்கியது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு புத்தக திருவிழாவை துவக்கி வைத்தார்.
அப்போது அவர் பேசுகையில்,
என் கிராமத்தில் இருக்கும் அரசு பள்ளியில் நான் படித்தேன். சட்டப்படிப்பு படிக்கையில் என் ஆங்கில அறிவை வளர்க்க ஆங்கில தினசரி பத்திரிக்கைகளை படித்தேன். சென்னை உயர் நீதிமன்றத்தில் 11 ஆண்டுகள் பணியாற்றினேன். அப்போது ஒரு நாள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எனக்கு போன் செய்து, உங்களை பஞ்சாப், ஹரியானா மாநிலங்களின் சன்டிகர் உயர் நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்திருக்கிறேன் என்று கூறினார்.
நான் எந்தவித மறுப்பும் தெரிவிக்காமல் சன்டிகர் உயர் நீதிமன்றத்தில் பணியாற்றினேன். அங்கு பணியாற்றியபோது ட்ரைப்பூ என்ற தினசரியில் நான் சன்டிகர் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவியேற்கப் போவதாக செய்தி வந்ததைப் பார்த்து நான் அதிர்ந்தேன்.
உடனே அந்த தினசரியின் நிருபரை அழைத்து உங்களுக்கு எப்படி இந்த செய்தி தெரிய வந்தது என்று கேட்டேன். அதற்கு அவர், எங்கள் டெல்லி ஏஜென்சிகள் மூலம் கிடைத்தது என்றார். அதற்கு மேல் அவரிடம் எதுவும் கேட்க எனக்கு உரிமை இல்லை. அது பத்திரிக்கை சுதந்திரம். அதில் யாரும் தலையிட முடியாது.
அரசு விழாக்கள் மற்றும் குடும்ப விழாக்களில் பூங்கொத்து, சால்வை, விலை உயர்ந்த பொருட்களை நினைவுப் பரிசாக அளிப்பதை விட தரமான புத்தகங்களை கொடுங்கள். வீடுகள், ஊர்கள் தோறும் நூலகங்கள் இருக்க வேண்டும். தாய், தந்தைக்கு அடுத்தபடியாக இருப்பவர் ஆசிரியர். நாம் எவ்வளவு பெரிய பதவியில் இருந்தாலும் ஆசிரியருக்கு மதிப்பு அளிக்க வேண்டும் என்றார்.