லோக்சபா தேர்தலில் 40திலும் தனித்து போட்டி... 15ல் வெற்றி: அன்புமணி ராமதாஸ்
ஒருங்கிணைந்த சென்னை மாவட்ட பாமக பொதுக்குழு கூட்டம் மேற்கு மாம்பலத்தில் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு அன்புமணி தலைமை வகித்துப் பேசினார் அப்போது அவர் கூறியதாவது:
லோக்சபா தேர்தல் நவம்பர் மாதமே நடைபெறுவதற்கான வாய்ப்பு உள்ளது. எனவே பாமகவினர் அதைச் சந்திக்க நாம் தயாராக இருக்க வேண்டும். தற்போது கட்சி தொடங்கி வெள்ளி விழா கொண்டாடுகிறோம். கட்சியின் கொள்கைகள் தொடர்பாக மக்களிடம் தெரிவிக்க கூட்டங்கள், கருத்தரங்குகள் நடத்த வேண்டும்.
மக்களவைத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடும்.இதில் 15 தொகுதிகளில் நிச்சயம் வெற்றிபெறுவோம்.ராமதாஸ் கைதுக்கு முன்பு 10 தொகுதிகளில்தான் வெற்றிபெறுவோம் என்ற நிலைதான் இருந்தது.தற்போது அது அதிகரித்துள்ளது.
தமிழக மக்கள் மாற்றம் வராதா என்று ஏங்கிக் கொண்டுள்ளனர். அந்த மாற்றத்தை பாமகவால்தான் கொடுக்க முடியும்.பாமகவினர் ஐந்து ஐந்து பேராக பிரிந்து, வீடு வீடாகச் சென்று, எங்களுக்கு ஒருமுறை வாய்ப்பு தாருங்கள், தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை ஒழிப்போம், ஒரு பைசா செலவு இல்லாமல் கல்வியைக் கொடுப்போம், இந்தியாவில் 108 ஆம்புலன்ஸ் திட்டத்தைக் கொண்டு வந்தது நாங்கள்தான் என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.
சமச்சீர் கல்வியைக் கொண்டுவர பல்வேறு போராட்டங்களை நடத்தியது பாமகதான். நுழைவுத் தேர்வு ரத்து, லாட்டரி ஒழிப்பு, புகையிலைக்குத் தடை போன்றவற்றுக்குப் போராட்டம் நடத்தி வெற்றி பெற்றோம். இதையெல்லாம் மக்களிடம் எடுத்துச் சொல்லுங்கள்.
ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள ஜெ.குருவுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் சிகிச்சை அளிக்காதது கண்டிக்கத்தக்கது. பொது சொத்துக்கு சேதம் விளைவித்தோம் என்று 70 லட்சம் தர வேண்டும் என்று செய்தி வருகிறது.ஆனால் ஒரு பைசாகூட தரமாட்டோம் என்றார் அவர்.