அமெரிக்கா: துபாக்கியுடன் சுற்றிய 14 வயது சிறுவன் என்கவுண்டரில் பலி
நியூயார்க்: அமெரிக்காவில் துப்பாக்கியுடன் சுற்றிய 14 வயது சிறுவனை கைது செய்ய முயன்ற போது, போலீசாருக்கும், சிறுவனுக்கும் இடையில் உண்டான பிரச்சினையில் அச்சிறுவன் என்கவுண்டரில் பலியானான்.
நேற்றிரவு நியூயார்க் நகர போலீசார் பிரான்க்ஸ் பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த போது, அதிகாலை 3 மணியளவில் துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டு அதிர்ந்துள்ளனர். உடனடியாக, சத்தம் வந்த திசை நோக்கி விரைந்தனர்.
சம்பவ இடத்தில் சுமார் 14 வயது மதிக்கத் தக்க சிறுவன் ஒருவன் கையில் துபாக்கியுடன் நின்றதைக் கண்ட போலீசார், அச்சிறுவனை துப்பாக்கியைக் கீழே போடுமாறு எச்சரித்துள்ளனர். ஆனால், அவனோ போலீசாரை நோக்கி சுடுவதற்கு ஆயத்தமாகியுள்ளான்.
இதனால், உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக, போலீசார் அவனைச் சுட்டுள்ளனர். இதில் சம்பவ இடத்திலேயே அவன் பரிதாபமாக பலியானான்.
போலீசாரின் விசாரணையில் அச்சிறுவன் பெயர் ஷாலிவர் டவ்ஸ் என்பதும், அவன் மீது ஏற்கனவே கொலை முயற்சி வழக்கு ஒன்று பதிவாகி இருப்பதும் தெரிய வந்துள்ளதாம்.