நாஞ்சில் சம்பத் மீதான தமிழக அரசின் வழக்குகள் வாபஸ்!
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் தாலுகா, கோபால்பட்டி என்ற இடத்தில் 2002ஆம் ஆண்டு நடந்த ம.தி.மு.க. பொதுக் கூட்டம் ஒன்றில் முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாக பேசியதாக, தமிழக அரசு சார்பில் நாஞ்சில் சம்பத் மீது வழக்கு தொடுக்கப்பட்டது.
அதேபோல், 2004ஆம் ஆண்டு வேடசந்தூர் தாலுகா, பாளையம் பகுதில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றிலும் ஜெயலலிதாவை அவர் அவதூறாக பேசியதாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த இரண்டு வழக்குகளின் விசாரணையும் நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு ம.தி.மு.க.வில் இருந்து விலகிய நாஞ்சில் சம்பத் விலகி அ.தி.மு.க.வில் இணைந்தார். அவருக்கு துணை கொள்கைப் பரப்பு செயலாளர் பதவி வழங்கப்பட்டது.
இதையடுத்து, தற்போது நாஞ்சில் சம்பத் மீது அரசு தொடுத்த வழக்குகளை வாபஸ் வாங்க முடிவு செய்யப்பட்டு, மேற்படி இரண்டு வழக்குகளில் இருந்தும் அவரை விடுவிக்க அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
அந்த அரசு ஆணையுடன் நேற்று திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜரான நாஞ்சில் சம்பத், மாவட்ட நீதிபதி பாலசந்திரகுமாரிடம் அரசு ஆணையை வழங்கினார். அத்துடன், இந்த அரசு ஆணையின்படி தம்மை வழக்குகளில் இருந்து விடுவிக்கும்படி மனு செய்தார்.
இந்த மனுவை ஏற்றுக்கொண்ட மாவட்ட நீதிபதி, வருகின்ற 12ஆம் தேதிக்கு வழக்கை ஒத்தி வைத்தார். மேலும், அன்றைய தினம் நாஞ்சில் சம்பத் நேரில் ஆஜராக தேவையில்லை என்றும், அவரது வழக்கறிஞர் ஆஜரானால் போதும் என்றும் நீதிபதி கூறினார்.