ஆடி அமாவாசை: ராமேஸ்வரம், வேதாரண்யத்தில் புனித நீராடி முன்னோர்களை வழிபட்ட மக்கள்!
ராமேஸ்வரம்: ஆடி அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளித்து வழிபட்டனர்.
தட்சிணாயண காலமான ஆடி முதல் மார்கழி வரை தேவர்கள் உறங்கும் வேளை. தேவர்கள் உறங்குவதால், நம் முன்னோர் பிதுர்லோகத்தில் இருந்து இறங்கி வந்து நம்மைப் பாதுகாப்பர். அவர்களை வரவேற்கும் நன்னாளே ஆடி அமாவாசை. நன்றி உணர்வுள்ள ஒவ்வொரு வரும், இந்நாளில் தர்ப்பணம் செய்து, முன்னோரை வரவேற்க வேண்டும்.
எனவேதான் ஆடி அமாவாசையை இந்துக்கள் சிறந்த நாளாக கடைபிடிக்கின்றனர். இந்த நாளில், நாடு முழுவதிலும் உள்ள ஆறு, கடல், நதிகளில் புனித நீராடி தங்களது முன்னோர்கள் நினைவாக பூஜைகள் செய்து வழிபாடு நடத்துவார்கள்.
ரமேஸ்வரத்தில் ஆடி அமாவாசை
ராமேசுவரம் ராமநாத சுவாமி கோவிலில் ஜூலை 31ம்தேதி ஆடி திருக்கல்யாண திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இன்று காலை ராமநாதசுவாமி கோயிலில் இருந்து அருள்மிகு ராமர் தங்க கருட வாகனத்தில் அக்னி தீர்த்த கடற்கரையில் எழுந்தருளினார். அதனை தொடர்ந்து அக்னி தீர்த்த கடலில் ராமர் புனிதநீராடி பக்தர்களுக்கு தீர்த்தவாரி கொடுத்தார்.
பல்லாயிரக்கணக்கான பக்தர்கள்
ராமேஸ்வரத்தில் உள்ள புனித அக்னி தீர்த்த கடலில் நீராடுவதற்காக நாடு முழுவதிலும் இருந்து குவிந்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளித்தனர்.
அம்மன் ஊர்வலம்
இதனை தொடர்ந்து தங்க பல்லக்கில் ஸ்ரீபருவதவர்த்தினி அம்மன் வீதி உலா நடந்தது. இதனை குழுமியிருந்த பக்தர்கள் கண்டு தரிசனம் செய்தனர்.
22 தீர்த்தங்கள்
இதையடுத்து, ராமநாதசுவாமி கோயிலுக்குள் உள்ள 22 தீர்த்தங்களுக்கு சென்று புனிதநீராடினர். இதற்கென கோயிலின் 4 ரத வீதிகளிலும் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
அலைமோதிய கூட்டம்
ஒரே நாளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ராமேஸ்வரத்தில் குவிந்ததால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. பக்தர்களின் பாதுகாப்பு பணிக்காக நூற்றுக்கணக்கான போலீசார் ராமேஸ்வரத்தில் குவிக்கப்பட்டிருந்தனர்.
குற்றாலத்தில் தர்ப்பணம்
குற்றாலத்தில் இன்று குவிந்த பல்லாயிரக்கணக்கானோர் அருவியில் நீராடிவிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளித்தனர். தொடர்ந்து குற்றாலநாதரை வழிபட்டனர்.
பாபாநாசத்தில் வழிபாடு
நெல்லை மாவட்டம் பாபநாசம் தாமிரபரணி ஆற்றில் நீராடிய பக்தர்கள் முன்னோர்களுக்கு தர்பணம் செய்து வழிபட்டனர். தொடர்ந்து பாபநாசம் சிவனை வழிபட்டு அன்னதானம் செய்தனர்.