பாக்.ராணுவத்துக்கு ஆதரவாக பேசிய ஏ.கே.அந்தோணி மன்னிப்பு கேட்க வேண்டும்: சுஸ்மா ஆவேசம்

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி நடத்திய தாக்குதல் நடத்திய விவகாரத்தில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே. அந்தோணியும், ராணுவமும் முரண்பட்ட தகவலை அறிக்கையாக வெளியிட்டனர். பின்னர் அதில் திருத்தம் செய்யப்பட்ட விவகாரம் எதிர்கட்சிகளிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் இவ்விவகாரம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இன்று கடும் அமளியை ஏற்படுத்தியது. முரண்பட்ட தகவலை வெளியிட்ட அந்தோணி இது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்றும், அவர் பதவி விலக வேண்டும் என்றும் எதிர்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர். இதனிடையே மாநிலங்களவையில் இது தொடர்பாக விளக்கம் அளித்து பேசிய அந்தோணி, தமக்கு சொல்லப்பட்ட தகவலைத்தான் தாம் தெரிவித்ததாக கூறினார். இந்த பிரச்னை காரணமாக மக்களவை பகல் 12 மணி வரையிலும், பின்னர் மதியம் 2 மணி வரையிலும் ஒத்திவைக்கப்பட்டது.
பிற்பகலில் அவை கூடியதும் மக்களவையிலும் இந்த விவகாரம் அமளியை ஏற்படுத்தியது. எனினும் அதுபற்றி கண்டுகொள்ளாத மத்திய அரசு, பிற்பகலில் உணவு பாதுகாப்பு மசோதாவை தாக்கல் செய்தது. இது பாரதீய ஜனதா உள்ளிட்ட எதிர்கட்சியினருக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது.
உணவு பாதுகாப்பு மசோதா தாக்கலானதும், இது தொடர்பாக பேசிய மக்களவை எதிர்கட்சித் தலைவரும், பாரதீய ஜனதா மூத்த தலைவருமான சுஷ்மா ஸ்வராஜ், "எல்லை பாதுகாப்பைவிட உணவு பாதுகாப்பு மசோதா முக்கியமானதா?" என கேள்வி எழுப்பினார்.
மேலும் பாதுகாப்புத் துறை அமைச்சர் அந்தோணி மாநிலங்களவையில் அளித்த விளக்கத்தினால் திருப்தி அடைய முடியாது என்றும், அவர் மக்களவைக்கும் வந்து தாம் அளித்த முரண்பாடான அறிக்கைக்காக மன்னிப்பு கோர வேண்டும் என்றும் சுஷ்மா வலியுறுத்தினார்.
ஆனால் அந்தோணி அவைக்கு வராததையடுத்து எதிர்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவை நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications